ஜனாதிபதியின்அறிவுத்தலின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான வேலைத் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில்  மேற்கொள்ளுமாறும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த பிரேரணை தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில்  நேற்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற விசேட  கலந்துரையாடலின் போது  அமைச்சர் இதனைக் தெரிவித்தார் .

இப்பிரேரணை தொடர்பிலான காரணங்களை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென  தோட்ட தொழிற்சங்கங்கள்  தெரிவித்தன.

அதன்படி தாம் கோரும்  நாளாந்த சம்பள உயர்வை வழங்குமாறும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்குத் தேவையான தலையீட்டை ஜனாதிபதி செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு  பிரச்சினைகள் தொடர்பில் தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்  அதற்கு  பதிலளித்த அமைச்சர் தன்னால் கொண்டுவரப்படவுள்ள  புதிய தொழில் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம்  தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட பெருந்தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.