பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம்

சினிமா இந்தியாவிற்கு அறிமுகமான புதிதில் புராண கதைகள் சினிமா ஆனது. அதன்பிறகு அதன் அடுத்த கட்டமாக சமூக கதைகள் படமானது. அப்போது சமூக சீர்திருத்த கதைகளை கொண்ட படங்கள் வெளியானது. சுதந்திர போராட்ட காலத்தில் தேசப்பற்றை வலியுறுத்திய படங்கள் வந்தது. 'பொலிட்டிகல் சட்டையர்' என்று அழைக்கப்படும் முதல் அரசியல் நையாண்டி படம் 'முகமது பின் துக்ளக்'.

அப்போது சினிமாவிலும், நாடகத்திலும் காமெடி நடிகராக இருந்த சோ தான் நடத்தி வந்த மேடை நாடகத்தை அப்படியே படமாக இயக்கினார். இது அவருக்கு முதல் படம் என்பதால் 'இயக்கம் : சோ' என்று டைட்டில் போடுவதற்கு பதிலாக 'இயக்குனராக கற்றுக் கொள்ள முயலும் சோ' என்று போட்டார்.

1971ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சோ, ஆர்.நீலகண்டன், ராஜகோபால், எஸ்.வி.ஷண்முகம் பிள்ளை, ஏ.கே.வீராச்சாமி, பீலி சிவம், மொட்டை சுப்பையா, குண்டுமணி, ஆர்.எம்.சோமசுந்தரம், சி.பி.கிட்டான், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஜெயகவுசல்யா, சுகுமாரி, உஷா, மனோரமா, விஜயசந்திரிகா, ஜி.சகுந்தலா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். மத்திய மாநில அரசியலை கடுமையாக விமர்சித்து இந்த படம் வெளியானது.

படத்தின் கதை இதுதான்…
தேசத்தின் நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காக காந்தியவாதியான தணிகாசலம் மகாதேவன், ராகவன் என்னும் இரு இளைஞர்களுடன் இணைந்து திட்டம் ஒன்றைத் தீட்டுகிறார். ஆட்சியை பிடித்து மக்களிடம் நாட்டு நடப்புகளை சொல்லிவிட்டு பதவி விலகி விட வேண்டும் என்பது அவரது திட்டம். அதன்படியே நடக்கிறது. ஆனால் உரிய காலத்தில் ஆட்சியை விட்டு வெளிவர மறுக்கிறான் மகாதேவன் (சோ). சூழ்ச்சி செய்து தனது தந்திரமான பேச்சு சாமர்த்தியத்தால் மக்களை வைத்தே ராகவனைக் கொன்றுவிடுகிறான்.

பின்னர் துக்ளக் மன்னனாக தன்னை கருதிக் கொள்ளும் மகாதேவன் செய்கிற கோமாளித்தனங்கள்தான் படம். படத்தை வெளியிட அன்றைக்கு கடும் எதிர்ப்புகள் இருந்தது. படத்தை வெளியிட தடை போட்டார்கள். காமராஜர் தலையிட்டு படத்தை வெளியிட உதவி செய்தார். படத்தை இப்போது பார்த்தாலும் நாட்டு நடப்போடு ஒத்துப் போவதுதான் படத்தின் சிறப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.