ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன்

'பிரேமம்' மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் 'கொடி, தள்ளிப் போகாதே, சைரன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார்.

தெலுங்கில் 'அ ஆ' படம் மூலம் அறிமுகமான அனுபமா தொடர்ந்து பல தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழைக் காட்டிலும் அதிகமான தெலுங்குப் படங்களில் நடித்துள்ள அனுபமாவின் அடுத்த தெலுங்குப் படமாக 'டில்லு ஸ்கொயர்' படம் நாளை வெளியாக உள்ளது.

இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார் அனுபமா. அதற்கு காரணம் என்ன என்பதை படத்தின் கதாநாயகன் சித்து நேற்று மேடையில் தெரிவித்தார்.

“படத்தின் போஸ்டர் ஒன்று இன்று வெளியானது. அதில் அனுபமா கை வைத்திருப்பதைப் பற்றி ரசிகர்கள் பலரும் கிண்டலடித்துள்ளனர். நடிகை என்று வரும் போது அவர்களைப் பற்றிய கமெண்ட்டுகளை கவனமாகச் செய்ய வேண்டும். இது மிகவும் சென்சிட்டிவ்வான ஒரு விஷயம். யாரும் எல்லையைக் கடக்க வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறேன். இது போன்ற விஷயங்களில் ஆரோக்கியமான சூழலை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” எனப் பேசினார்.

நேற்று வெளியான அந்த போஸ்டரில் அனுபமாவின் கை, நாயகன் சித்துவின் இடுப்புக்குக் கீழே இருந்தது. அதைத்தான் ரசிகர்கள் ஆபாசமாகக் கிண்டலடித்துள்ளார்கள்.

ரசிகர்களின் கிண்டலால் மனமுடைந்த அனுபவமா நேற்றைய விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் இப்படத்திற்கான மற்ற புரமோஷன் நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டு வந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.