“அன்று ஜெயலலிதா சட்டம் – ஒழுங்கை பாதுகாத்தது போலவே இன்று மத்தியில் மோடி ஆட்சி” – தினகரன் @ நெல்லை

திருநெல்வேலி: “இந்தியாவில் 3-வது முறையாக மோடி பிரதமராவது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்த விஷயம்” என்று திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமமுக பொதுசெயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி, தாழையூத்து பகுதிகளில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அவர் பேசியது: “பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு சிறந்த ஆட்சியை, மக்கள் விரும்புகின்ற ஆட்சியை தந்துள்ளார். இதனால் இந்தியாவில் தரம் இன்றைக்கு உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது. உலக நாடுகள் பாராட்டும் அளவுக்கு, இந்தியாவை உலக நாடுகள் வரிசையிலே சிறந்த ஒரு இடத்தை பெற்று தருகின்ற வகையில் 10 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தியிருக்கிறார்.

மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் பல நாடுகள் இன்றைக்கு தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில், ஏன் வளர்ந்த நாடுகளே தத்தளித்து கொண்டிருக்கும்போது, இந்தியாவில் பொருளாதாரத்தை சரிவடையாமல் கொண்டு செல்கிறார்.

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சட்டம் ஒழுங்கை எவ்வாறு பாதுகாத்தாரோ அதுபோல் இன்று இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆட்சியாக மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருக்கிறது.

இந்தியாவில் தொடர்ந்து 3-வது முறைாக மோடி பிரதமராவது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை கொடுப்பதன் மூலம் தமிழகத்தை நாட்டின் தலைசிறந்த மாநிலமாக உயர்த்த முடியும். அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

மோடி பிரதமராவதற்கு அமமுக தமிழகம் முழுவதும் கடுமையாக பணியாற்றி வருகிறது. இப்பகுதியில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த பாஜக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். அதன்மூலம் திருநெல்வேலி பகுதி மட்டுமல்ல தமிழகமே வளர்ச்சி அடையும்” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.