“கச்சத்தீவு குறித்து ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்” – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல.” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என்று கூறி விமர்சித்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கச்சத்தீவு பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்வது முக்கியம். இந்த பிரச்சினை நீண்ட காலமாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் 1974-ல் விளக்கம் தரப்பட்டுள்ளது. மேலும், அப்போது போடப்பட்ட இந்தியா – இலங்கை ஒப்பந்தப்படி கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின்போது முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங் 1974ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், “பாக் ஜலசந்தியில் கடல் எல்லையை வரையறுக்கும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் நியாயமானதாகவும், சமமானதாகவும் கருதப்படும் என்று நான் நம்புகிறேன். அதே சமயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம், கடந்த காலங்களில் இரு தரப்பினரும் அனுபவித்து வந்த மீன்பிடித்தல், புனித யாத்திரை மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் உரிமைகள் எதிர்காலத்துக்காக முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன’” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இப்படி தெரிவித்த, இரண்டே ஆண்டுகளில் இந்திய மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிப்பதை தடை செய்தனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் கச்சத்தீவு இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டதுடன், ‘இலங்கையின் இந்த பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் இந்தியாவின் மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் போடப்பட்டதன் விளைவு, கடந்த 20 ஆண்டுகளில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1,175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையர்களால் இந்த 20 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கச்சத்தீவு விவகாரம் கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. உண்மையில், தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல. பல ஆண்டுகளாக உள்ள இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நேரடி பிரச்சினை.

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது. இந்தியாவின் நிலப்பரப்பில் அப்போதைய மத்திய அரசும், பிரதமர்களும் காட்டிய அலட்சியமே இது மாதிரியான பிரச்சினைகள் தொடர்ந்து எழக் காரணம். முன்னாள் பிரதமர்கள் யாரும் கச்சத்தீவு பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை.

மே 1961ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, “இந்தச் சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை, அதன் மீதான எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இது போன்ற விஷயங்கள் காலவரையின்றி நிலுவையில் இருப்பதும், மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதும் எனக்குப் பிடிக்கவில்லை.” என்று ஒரு முறை பேசினார்.

இதிலிருந்து நேரு, இந்த குட்டித் தீவை ஒரு தொல்லையாகப் பார்த்தார் என்பது தெளிவாகிறது. மேலும், இந்த தீவை எவ்வளவு சீக்கிரம் தாரை வார்க்க முடியமா, அவ்வளவு நல்லது என்பதே நேருவின் பார்வையாக இருந்துள்ளது. இந்த பார்வை இந்திரா காந்திக்கும் தொடர்ந்தது.

பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தி, கச்சத்தீவை ஒரு சிறிய பாறை என்று அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த புறக்கணிப்பு மனப்பான்மையே, கச்சத்தீவு தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கான காங்கிரஸின் அணுகுமுறையாகும்” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.