தனியொருத்தியாக ஒரு படத்தை உருவாக்கிய சாதனை பெண்

சினிமாவின் அனைத்து பணிகளையும் ஒருவரே செய்து ஒரு படத்தை உருவாக்கும் சாதனை முயற்சிகள் அவ்வப்போது நடந்துள்ளது. கணேஷ் பாபு என்ற நடிகர் மற்றும் இயக்குனர் காட்டு புறா, நானே வருவன் உள்ளிட்ட சில படங்களில் 24 துறைகளில் பணியாற்றி சாதனை படைத்தார். 'வெங்காயம்' படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் தற்போது 'தி ஒன்' என்ற படத்தின் அனைத்து பணிகளையும் அவரே செய்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமாவின் 31 துறைகளை கையாண்டு பல விருதுகளை பெற்று சாதனை படைத்திருக்கிறார் பெண் இயக்குனர் எஸ்.லாவண்யா. முதல் முறையாக 'பேய் கொட்டு' என்ற ஹாரர் படத்தை 24 கிராப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு இயக்கியிருக்கிறார் லாவண்யா. இதனுடன் சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட துணை பணிகளையும் மேற்கொண்டு. மொத்தம் 31 துறைகளில் பணியாற்றி இருக்கிறார். அதோடு படத்தின் நாயகியாகவும் நடித்திருக்கிறார்.

இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ். லாவண்யா தயாரித்திருக்கிறார். கின்னஸ் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட சாதனை சான்றிதழ்களை பெற்றிருக்கிறார் லாவண்யா.

இதுகுறித்து லாவண்யா கூறும்போது ''சுயாதீன திரைப்பட படைப்பாளியான நான் திரைத்துறையில் இயங்கும் அனைத்து கிராப்டுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன். இதைத்தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், பைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இஎப்எக்ஸ், விஎப்எக்ஸ், எஸ் எப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன் ஆகிய 31 கிராப்ட்டுகளையும் சுயமாக கற்று, 'பேய் கொட்டு' எனும் இந்த ஹாரர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

தவறுகள் செய்தால் தலையில் கொட்டுவார்கள் அல்லவா… அதே போல் நாம் ஏதேனும் தவறாக நினைத்தால், பேய் நம் தலையில் கொட்டும். இது வித்தியாசமான கதைக்களமாகவும், சுவாரசியமான திரைக்கதையாகவும் உருவாகி இருக்கிறது'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.