இனி இறந்தவர்கள் உடனும் பேசலாம்… சீனாவில் டிரெண்டாகும் AI… வெறும் ரூ.235 தான்!

AI Digital Avatar Creation: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போதைய காலகட்டத்தில் அசுரத்தனமாக வளர்ச்சியடைந்து வருவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, உலகின் தோற்றமே எதிர்காலத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால்தான் முற்றிலும் மாறுபடலாம் என தங்களின் கணிப்புகளை கூறிவருகின்றனர். அனைத்து துறையிலும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையை தவிர்க்க முடியாது என்றாலும், அதனை அறிந்துகொண்டு அதன் வழியில் புது புது வழிகளை கண்டடைவதே சரியான தீர்வாக இருக்கும் எனலாம். 

அந்த வகையில், சீன நாட்டிலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, மக்கள் தங்களின் மறைந்த அன்புக்குரியவர்களை AI தொழில்நுட்பம் மூலம் தொடர்பு வைத்துக்கொள்ள முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மறைந்தவர்களை நினைவுக்கூறும் சீன மக்களின் பாரம்பரிய திருவிழாவையொட்டி AI தொழில்நுட்பம் மூலம் தங்களின் அன்புக்குரியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் போக்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

சீனர்களின் அணுகுமுறை

சீன நெட்டிசன்கள் AI உதவியுடன் அவர்களின் மறைந்த அன்புக்குரியவர்களின் டிஜிட்டல் அவதாரை உருவாக்கி, அதனுடன் நீங்கள் உரையாடலை மேற்கொள்ளலாம். இதற்கு 20 யுவான் செலவாகு். அதாவது இந்திய மதிப்பில் 235 ரூபாயாகும். இந்த போக்கு சீனாவில் அதிகமாகி வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சீனர்கள் அணுகும் முறையும் இதன்மூலம் வெளிப்படுகிறது எனலாம். 

சீனாவில் அதிகரிக்கும் AI போக்கு

இதற்கு ஓர் உதராணமாக, தைவான் பாடகரான Bao Xiaobai என்பவர் செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது மறைந்த மகளின் அவதாரை உருவாக்கியிருக்கிறார். கடந்த 2022ஆம் ஆண்டில் உயிரிழந்த அவரின் 22 வயது மகளின் அவதாரை AI மூலம் உருவாக்கி, அவருடைய மகளின் குரலில் அவரிடம் இருந்த சிறு ஆடியோவையும் வைத்து கடந்த ஓராண்டாக AI தொழில்நுட்பம் மூலம் பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளார். அதாவது, அவரின் மகளின் குரலில் அவளுடைய தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் பாடும் வகையில் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த வீடியோவை கடந்த ஜனவரி மாதம் அவர் வெளியிட்டிருந்தார்.     

அதேபோல், சீனாவின் முன்னணி AI நிறுவனமாக அறியப்படும் SenseTime நிறுவனமும் அதன் முழு திறனை வெளிக்காட்டும் வகையில் சமீபத்தில் ஒரு செயலில் இறங்கி அதில் வெற்றியும் அடைந்தது. அதாவது, அந்த நிறுவனத்தின் நிறுவனரான Tang Xiao’ou உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், அவரின் அவதாரை AI மூலம் உருவாக்கி நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வைத்துள்ளனர். 

இதில் பிரச்னையும் உள்ளது…

அதாவது, மறைந்த நிறுவனர் Tang உயிருடன் இருந்தபோது எடுக்கப்பட்ட அவரின் வீடியோ, ஆடியோக்கள் மூலம் Tang-இன் டிஜிட்டல் அவதாருக்கு பயிற்சி கொடுத்துள்ளனர். இதையடுத்து, மனித நடத்தையை பிரதிபலிப்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை நிரூபிக்கும் வகையில் ஊழியர்கள் மத்தியில் அந்த டிஜிட்டல் அவதார் உரை நிகழ்த்தியது.

இது எப்படி பலருக்கும் நன்மையை அளிக்கிறதோ அதேபோன்று தொந்தரவையும் அளிப்பதையும் மறக்க முடியாது. சமூக வலைதளங்களில் சில நாள்களுக்கு முன் மறைந்த பாடகர் Qiao Renliang என்பவரின் பழைய வீடியோ மற்றும் ஆடியோக்கள் மூலம் புதிய பாடல் ஒன்றை நெட்டிசன்கள் உருவாக்கி வைரலாக்கியது அந்த பாடகரின் குடும்பத்தின் தரப்பில் இருந்து கடுமையான பிரச்னை எழுந்தது. இதுபோல் அனுமதியின்றி இறந்தவர்களுக்கு அவதார் உருவாக்குவதற்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.