திண்டுக்கல்: காதலர்களைக் கட்டிப்போட்ட கும்பல்; சகோதரிகளுக்கு நேர்ந்த கொடுமை… போலீஸ் நடவடிக்கை!

திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 19,17,13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 19, 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. 19 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் இருவரும் தங்களது காதலர்களுடன் கடந்த மார்ச் 30, இடையகோட்டையில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்கு சென்றனர்.

மீண்டும் வீடு திரும்பிய போது அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு சாலையோரம் நின்று கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் 21, முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் 26, முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் 22 ஆகிய 3 பேரும் அந்த சிறுமிகளிடம் `எதற்காக இங்கு வந்தீர்கள்? யாருடன் வந்தீர்கள்’ என கேட்டுள்ளனர். ஹோட்டலில் சாப்பிட்ட பில் தொகையை கொடுத்து விட்டு, வெளியே வந்த காதலர்கள், அவர்களிடம் தங்களுடன் வந்ததாக கூறியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

பின்னர் அவர்கள் 3 பேரும் சுள்ளான் என்ற பிரசன்ன குமார் 25, என்பவருக்கு போன் செய்து `2 சிறுமிகள் சிக்கியுள்ளனர், அவர்களை கத்தி முனையில் மிரட்டி அழைத்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காதலர்கள் 2 பேரையும் ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு, சிறுமிகள் 2 பேரையும் மற்றொரு பைக்கில் ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் தாமரைக்குளம் பகுதிக்கு வந்துள்ளனர்.

அங்கு வந்தவுடன் காதலர்கள் இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டனர். அந்த இடத்துக்கு பிரசன்ன குமாரும் வந்து விடவே 4 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸார், தப்பி ஓடிய பிரசன்ன குமாரை தேடி வருகின்றனர்.

கைது

பிரசன்ன குமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் தாலுகா, மேற்கு தாடிக்கொம்பு, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட 3 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுத்தி, மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.