காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதராவில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சமோசாவில் மாட்டிறைச்சி சேர்த்து விற்பனை செய்த காரணத்துக்காக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவல் காவல் துறைக்கு கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது சமோசாவில் மாட்டிறைச்சி சேர்த்தது உறுதியாகியுள்ளது. அதனை பரிசோதனைக்காக ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர்.
ஆய்வு முடிவில் உணவில் மாட்டிறைச்சி சமோசாவில் சேர்த்திருந்தது உறுதியானது. அதையடுத்து சமோசா விற்ற கடையின் உரிமையாளர்கள் இருவர் மற்றும் ஊழியர்கள் நான்கு பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சிப்வாட் பகுதியில் செயல்பட்டு வந்த அந்த கடையில், சமோசவை மொத்தமாக தயார் செய்து நகரில் உள்ள பல்வேறு உணவகங்களுக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த கடைகள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு சமோசா விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சமோசாவில் மாட்டிறைச்சி சேர்த்த விஷயத்தை தெரிவிக்காமல் இறைச்சி கலந்த சமோசா என்றே கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. லாபம் ஈட்டும் நோக்கில் பசுவின் இறைச்சியை சமோசாவில் சேர்த்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட உரிமையாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆட்டிறைச்சியின் விலை அதிகம் என்பதால் இதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
உணவு தயாரிக்க முறையான உரிமம் கூட பெறாமல் ஐந்து மாடி தளம் கொண்ட கட்டிடத்தில் சமோசா தயாரிக்கும் பணி நடந்துள்ளது. அதில் ஒரு தளத்தில் ஃப்ரிசர் வைக்கப்பட்டு மாட்டிறைச்சி பதப்படுத்தப்பட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணை தொடரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.