முதுமைக்கு மரியாதை 54 – முதுமையில் மூட்டுவலி… வராமல் தடுப்பது எப்படி?

‘வயதாகிவிட்டாலே மூட்டுவலி நிச்சயம்’ என்று செவி வழியாகவும், விளம்பரங்களின் மூலமாகவும் சொல்லப் படுகிற வார்த்தைகள் அதிகம். இதை உண்மையென நம்பி சிறிது தூரம் நடக்க சிரமப்பட்டாலே வீட்டுக்குள்ளேயே முடங்கும் சீனியர் சிட்டிசன்ஸ் அநேகர். அதேசமயம், எண்பது வயதிலும் கம்பீரமாக வலம்வரும் சூப்பர் சிட்டிசன்களையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஏன் இந்த நிலை? சென்னை, ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் ஜி.கல்யாணசுந்தரத்தைச் சந்தித்துப் பேசினோம்.

“மூட்டுவலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனப் பலரும் நினைத்துக் கொள்கிறோம். வயதாகும்போது, உடல் சார்ந்த உபாதைகளின் சதவிகிதம் அதிகரிப்பதால், மூட்டுவலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. ஆக, வயதாகும்போது மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, அது வயதான காலத்தில் ஏற்படும் நோயல்ல. வாகனத்தின் பயன்பாட்டைப் பொறுத்து அதன் பாகங்கள் தேய்வதைப் போலத்தான் வயோதிகத்தில் ஏற்படும் உடல் உறுப்புகளின் தேய்மானத்தையும் தவிர்க்க முடியாது. அப்படித்தான் எலும்புகளின் தேய்மானமும் அதனால் ஏற்படும் மூட்டுவலியும்.

நமது உடலில் தோள்பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய ஆறு மூட்டுகள் முக்கியமானவை. எலும்புகள் சந்திக்கும் இடமே மூட்டு. அங்கு ஜவ்வு போன்றதோர் உறுப்பு உள்ளது. அது தேயும்போது மூட்டிலுள்ள இரண்டு எலும்புகள் ஒன்றுக்கொன்று உராயும் போது வலி தோன்றுகிறது. இந்த மூட்டு களின் ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட தசைத் தொகுதி காரணமாக இருக்கிறது.

உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, மெனோபாஸ் காலகட்டத்தைத் தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காசநோய், சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மூட்டு வலி வெகு சீக்கிரமாகவே ஏற்படும். சரியான சிகிச்சை எடுக்காதபட்சத்தில் காலப்போக்கில் அதன் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். முழங்கால் மூட்டு, இடுப்பு, முதுகுத்தண்டுவடம், கழுத்து, தோள் பட்டை, கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் வலி ஏற்படலாம். இவற்றில் பொதுவாக அதிகமானோரை பாதிப்பது இடுப்புவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டு மற்றும் தோள்பட்டை வலி.

நீண்டநாள் (Chronic) பாதிப்பு வகைகளில் ஒன்றான மூட்டுவலியில், வலி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும். சிலர் வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு சரியாகிவிட்டது என்று நினைப்பார்கள். அது தவறு. முதல் நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்து, அதற்கேற்ப வாழ்வியலில் மாற்றங்கள் மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றால் வருங்காலத்தில் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

உதாரணமாக, அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றை சரியாகச் செய்ய வேண்டும். அதேநேரம், எந்தெந்த உடல் அசைவுகளைத் தொடர்ந்து செய்தால் பாதிப்பு அல்லது வலி உணர்வு அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்” என்றவரிடம் ‘மூட்டுவலியால் பெண்கள் அதிகம் பாதிக்கப் படுவது ஏன்?’ என்று கேட்டோம்

“மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மைக்கு உதவும் ‘கார்டிலேஜ்’ (cartilage) உருவாக்கத்துக்கு ‘ஈஸ்ட்ரோஜென்’ (Estrogen) ஹார்மோன் உதவும். இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்தால், மூட்டுப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. மெனோபாஸ் காலத்தைத் தாண்டிய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் மிகக் குறைவாகவே சுரக்கும். எனவே, மூட்டுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். உடல் பருமன் இருப்பவர் களுக்கும் மூட்டுவலி ஏற்படுவது இயல்பு. உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பதால், அவர்களுக்கு மிக எளிதாக மூட்டுவலி பிரச்னை ஏற்பட்டு விடுகிறது.

ஆகவே, பெண்கள் தங்கள் உடல்நலனில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். முக்கியமாக, உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடலுழைப்பு நிறைந்த ஏதாவதொரு பழக்கத்தை அன்றாடம் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, நடைப் பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் ஏதாவ தொன்றில் தினமும் ஈடுபடலாம். தசைக்கான உடற்பயிற்சிகளை மருத்துவர்களின் ஆலோசனைபடி செய்ய வேண்டியது அவசியம்” என்று சொன்ன டாக்டர் நிறைவாக…

“எலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். நாம் நிற்க, அமர, நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். ஆனால், இன்றைய தலைமுறையினர் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கின்றனர். அதிக அளவில் கரடு முரடான சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்கின்றனர். பள்ளி சிறுவர்கள் அதிக நேரம் செல்போன் பார்க் கின்றனர். இந்தச் செயல்கள் அனைத் துமே அவர்களின் எலும்பு தேய் மானத்தை அதிகரிக்கும் என்பதால் அவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது” என்றார்.

– தோள் கொடுப்போம்…

எலும்புகள் உறுதியாக இருக்க கால்சியம் அவசியம். கால்சியம் சத்தை கிரகிக்க வைட்டமின் டி தேவை. இந்த இரண்டும் போதுமான அளவில் நம் உடலில் இருக்க வேண்டும்.

கால்சியம் நிறைந்த உணவுகளில் முக்கியப் பங்கு வகிப்பவை பால் மற்றும் பால் பொருள்கள். பால் ஒவ்வாமை உடையவர்கள், தினசரி சோயா, கீரை, பீன்ஸ், பழச்சாறு சாப்பிட்டாலே எலும்புகள் பலமாகும் கால்சியம் கிடைத்துவிடும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக எலும்பு அடர்த்தி அதிகரிக்கும். ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். ஆட்டுக்கால் எலும்பு மஜ்ஜையில் கால்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.

கொள்ளு, சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்தது. எலும்பு உறுதிக்குக் கொள்ளு மிகவும் அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்துக் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும். புரொக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளைத் தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும்.

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, அத்திப்பழம், கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். இவை தவிர கேரட், வெண்டைக் காய், வெங்காயம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கீரைகளில் வெந்தயக் கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை ஆகியவற்றில் கால்சியம் உள்ளது. அவ்வப்போது கேழ்வரகு கஞ்சி, எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத கேழ்வரகு தோசை சாப்பிடலாம். கறுப்பு உளுந்து சுண்டல் சாப்பிடுவது நல்லது. இதுதவிர, முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை ஆகியவற்றைச் சுண்டல் செய்து சாப்பிடலாம்.

முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரீச்சம் பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. அதேபோல், மாங்கனீஸ், தாமிரம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புகளும் உள்ளன. இவை எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகமாக உள்ளதால் தினமும் காலை 7:00 – 8:00 மணி வரையிலும் மாலை 4:00 – 5:00 மணி வரையிலும் இதமான வெயிலில் மெதுவாக நடக்கலாம். இதனால், வைட்டமின் டி உற்பத்தியாகி எலும்பு களின் உறுதி அதிகரிக்கும்.

பெண்களுக்காக டாக்டரின் உணவுப் பரிந்துரைகள்!

மூட்டுவலி உள்ளவர்கள்

செய்ய வேண்டியவை: கைத்தடி, வாக்கர் போன்ற உபகரணங்கள், மூட்டில் ஏற்படும் பளுவைக் குறைத்து, வலியைக் குறைக்க உதவும். இடுப்பு, முழங்கால் வலி உள்ளவர்கள் கைத்தடியைப் பயன்படுத்து வது நல்லது. தகுந்த காலணிகளை உபயோகப்படுத்துவது அவசியம். பாதத்துக்குத் தகுந்தவாறு மென்மையான, உயரம் அதிகம் இல்லாத காலணிகளை அணிவது நல்லது.

செய்யக்கூடாதவை: முழங்கால் மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் அமர்வதும், அடிக்கடி மாடிப்படி ஏறுவதையும் தவிர்க்கவும். கழுத்தில் வலி உள்ளவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்கவும். மேலும், உயரம் அதிகமுள்ள தலையணையைப் பயன்படுத்தக் கூடாது. முதுகுவலி உள்ளவர்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பயணம் செய்வது அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்ற வற்றைத் தவிர்த்தல் நல்லது.

றெக்கை முளைத்த பறவை கூட்டைவிட்டுப் பறந்து வெளியேறுவது இயற்கை. மனிதர்களும் அப்படித்தான். வளர்ந்த பிள்ளைகள், படிப்பு, வேலை, திருமணம் என வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வுக்காக பெற்றோரை விட்டுப் பிரிந்து வேறு இடங்களுக்கு, ஊர்களுக்கு, நாடுகளுக்குச் செல்வது இன்று சகஜமாக நடக்கிறது. பிள்ளைகளைப் பிரிந்து வாழும் பெற்றோர் அனுபவிக்கும் அந்தத் தனிமை உணர்வை, ‘எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்’ (Empty nest syndrome) என்கிறது உளவியல். அதை எப்படி அணுகுவது… சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத்திடம் பேசினோம்.

“பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்த பிறகு கணவன், குழந்தைகள்… அவர்களே உலகம், அதுதான் வாழ்க்கை என்று உழன்றுகொண்டிருக்கும் பெற்றோர் இன்றும் நம்மில் பலர் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் பிள்ளைகள், அவர்களை விட்டுப் பிரியும்போது பாதிக்கப்படும் நிலையே ‘எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்’ (Empty nest syndrome) என்கிறோம்.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பிள்ளைகள் தங்களின் வருங்காலத்துக்காக மேற்படிப்பு, பணி மற்றும் திருமண மான பிறகு தனிக்குடித்தனம் என்று பெற்றோரை விட்டுப் பிரிவது இயற்கை தான். ஆனால், குழந்தைகளுக்காக தங்களுடைய மொத்த உழைப்பையும் கொடுத்து, தங்களுடைய எதிர்காலம் குறித்து கவலைப்படாமல் பிள்ளைகளின் வருங்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர்கள் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். உதாரணத்துக்கு… குழந்தைப் பருவம் முதல் பிள்ளைகளுக்காக உடை, உணவு, உறக்கம் என்று பார்த்துப் பார்த்துச் செய்து, தங்கள் உடல்நிலையை மறந்து, நேரம் காலம் பார்க்காமல் ஓடி ஓடி உழைத்தவர்களின் பிள்ளைகள், அவர்களை விட்டுப் பிரியும்போது மிகப் பெரிய வெற்றிடம் உருவாகும். அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். இந்த நேரத்தில் இதைச் செய்ய வேண்டும், அந்த நேரத்தில் அதைச் செய்ய வேண்டும் என்று இருந்தவர்களின் நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தில் எதையாவது யோசிக்கத் தொடங்கி மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை. பதற்றம் தொடரும்.

இந்த நிலையில், நடைமுறை வாழ்க்கையில் மற்றவர்களின் ஆதரவான அரவணைப்புடன் சில பெற்றோர், எதிர்காலத்துக்காகத்தான் பிள்ளைகள், நம்மைவிட்டுப் பிரிந்தார்கள் என்று காலப்போக்கில் ஏற்றுக்கொள்வார்கள். சிலர் என்னசெய்வது என்று தெரியாமல், அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிப்பார்கள்” என்றவர், இவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பகிர்ந்தார்.

“இப்படிப்பட்டவர்கள் உண்மையை உணரத்தான் வேண்டும். இந்தப் பிரிவை எவ்வளவு சீக்கிரம் ஒப்புக் கொள்கிறோமோ… அவ்வளவு சீக்கிரம் இந்த எம்ப்டி நெஸ்ட் சிண்ட் ரோமிலிருந்து வெளியே வரலாம். பொதுவாக கணவன் – மனைவி என்கிற வாழ்க்கை முறையில் ஓய்வுக்காலத்துக்குப் பிறகு ஒரு திட்டமிடல் இருக்கும். அந்தத் திட்டமிடலில் உங்களின் துணைக்கான சுதந்திரமான வாழ்க்கைக்கான வழியையும் இப்போதே சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை உங்கள் துணையுடன் கலந்துரை யாடுங்கள். நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் மற்ற நண்பர்களின் ஆலோசனையையும் ஆதரவை யும் பெறுங்கள். அவர்களில் சிலர் உங்களைப் போலவே பாதிக்கப் பட்டவர்களாக இருக்கலாம். அவர்கள் அனுபவத்தையும் உங்களின் அனுபவத்தையும் பகிரும்போது நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்யுங்கள். குறிப்பாக, ஆரோக்கியமான உணவை உட் கொள்வது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற வழக்க மான நடைமுறைகள் எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோமிலிருந்து உங்களை நிச் சயம் மீட்கும்” என்று தீர்வு சொன்னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.