ருதுராஜ் கெய்க்வாட் அபாரம்: கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அசத்தல் வெற்றி

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிலிப் சால்ட், துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா அணியை சென்னை பவுலர்கள் முழுவதுமாக கட்டுப்படுத்தினர்.

கொல்கத்தா அணி வீரர்கள் சுனில் நரைன் 27 ரன்களிலும், ரகுவன்ஷி 24 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 9 ரன்களிலும், ரசல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை கவுரமான நிலைக்கு எட்ட உதவினார்.

பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், முஸ்டாபிசுர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் கெய்வாட் ஆகியோ களமிறங்கினர். இந்த ஜோடியில் ரவீந்திரா 15 (8) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கெய்க்வாட்டுடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் 45 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மறுமுனையில் நிதானமாக ரன் சேர்த்துக்கொண்டிருந்த டேரில் மிட்செல் 25 (19) ரன்களில் சுனில் நரைன் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாக கெய்க்வாட்டுடன், ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்த ஷிவம் துபே 28 (18) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் கெய்க்வாட் 58 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 67 ரன்களும், தோனி 1 (3) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதுடன், ஐ.பி.எல். தொடரின் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.