`உலகின் புற்றுநோய் தலைநகரமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது’ என அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவின் சுகாதாரம் குறித்த அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வழங்கி வருகிறது. அந்தவகையில் 2024 உலக சுகாதார தினத்தின் போது வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் புற்றுநோய் தலைநகரமாக இந்தியா உள்ளது என எச்சரித்துள்ளது. மேலும், இந்தியாவில் புற்றுநோய், சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் மனநலப் பிரச்னைகள் உள்ளிட்ட தொற்றாத நோய்கள் (non-communicable diseases) அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்…
அச்சுறுத்தும் புற்றுநோய்…
*இந்தியாவிலுள்ள பெண்கள் பொதுவாக மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
*நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களால் ஆண்கள் பொதுவாக பாதிக்கப்படுகின்றனர்.
*இந்தியாவில் 2020-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.39 மில்லியனாக இருந்தது. 2025-ல் இந்த எண்ணிக்கை 1.57 மில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நோயின் பாதிப்பு ஐந்து ஆண்டுகளில் 13% வளர்ச்சியடைகிறது.
*மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சராசரி வயது குறைவாக உள்ளது. இந்தியாவில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சராசரி வயது 52-ஆக இருக்கிறது. அதுவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சராசரி வயது 63 ஆக உள்ளது.
*இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான சராசரி வயது 59, மேற்கு நாடுகளில் இது 70-ஆக இருக்கிறது.
புற்றுநோய் பரிசோதனையில் பின்தங்கும் இந்தியா…
*மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் அமெரிக்காவில் 82 சதவிகிதமாகவும், இங்கிலாந்தில் 70 சதவிகிதமாகவும் மற்றும் சீனாவில் 23 சதவிகிதமாகவும் உள்ளது. அதுவே, இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை 1.9 சதவிகிதமாகவுள்ளது.
*இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை 0.9% உள்ளது. இப்பரிசோதனைகள் அமெரிக்காவில் 73 சதவிகிதமாகவும், இங்கிலாந்தில் 70 சதவிகிதமாகவும் மற்றும் சீனாவில் 43 சதவிகிதமாகவும் உள்ளன.
அதிகரிக்கும் தொற்றா நோய்கள்:
*இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 63 சதவிகிதம் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. 2030-ம் ஆண்டிற்குள் இந்த நோய்களால் இந்தியாவிற்கு 3.55 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
*மூன்று இந்தியர்களில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (pre-diabetic) இருக்கிறார்.
*மூவரில் இருவர் உயர் ரத்த அழுத்தத்திற்கு முந்தைய நிலையில் (pre-hypertension) இருக்கின்றனர் என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மனஅழுத்தம்:
*சோதனைக்குட்படுத்தபட்ட 5000 நபர்களில் ஒவ்வொரு 10 நபர்களில் ஒருவர் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
*18-25 வயதிற்குட்பட்டவர்களிடையே மனஅழுத்தத்தின் சதவிகிதம் அதிகமாக உள்ளது. இந்த வயதுடையவர்களில் ஐந்தில் ஒருவர் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
*18-30 வயதுடையவர்களில் 80 சதவிகிதமும், 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களில் கணிசமானவர்கள் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.