பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண், சோசியல் மீடியா மூலம் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் என்பவரை காதலித்தார். கடந்த ஆண்டு மே மாதம் சீமா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வந்துவிட்டார். அவர் சச்சினை திருமணம் செய்து கொண்டு நொய்டாவில் வசித்து வருகிறார். அவர் இந்தியா வந்து ஒரு மாதம் கழித்த பிறகுதான் போலீஸாருக்கு இது குறித்து தெரிய வந்தது. போலீஸார் சீமாவிடம் விசாரணை நடத்தினர். சீமா பாகிஸ்தானில் உள்ள தனது சொத்துகளை விற்பனை செய்துவிட்டு இந்தியா வந்திருந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தானில் உள்ள சீமாவின் கணவர் குலாம் ஹைதர் தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்துவிட்டதாக, நொய்டா போலீஸாருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தன்னுடன் விவாகரத்து செய்து கொள்ளாமல் இந்தியாவிற்கு வந்து சச்சினை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் இந்தியாவிற்கு வந்த நோக்கம் சந்தேகத்தை கிளப்பும் வகையில் இருப்பதாகவும், மோசடி நோக்கில் அவர் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்றும், எனவே அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவேண்டும் என்று குலாம் ஹைதர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தை தனது இந்திய வழக்கறிஞர் மூலம் நொய்டா போலீஸில் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது சீமா ஹைதர் இடம் பெற்ற புதிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதில் சீமா ஹைதர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவரது கண், உதடு மற்றும் கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டு இருந்தது. சீமாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் சீமாவை கணவர் சச்சின் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. உடனே இது குறித்து நொய்டா போலீஸார் சீமாவிடம் பேசினர்.
ஆனால் அது போன்ற எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்று சீமா குறிப்பிட்டுள்ளார். ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டீப் ஃபேக் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பாகிஸ்தான் யூடியூபர்கள் இது போன்ற போலி வீடியோவை தயாரித்து வெளியிடுவதாக சீமாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் குறிப்பிட்டார்.