இந்து திருமணத்தை உறுதிப்படுத்த ‘கன்னிகாதானம்’ அவசியமில்லை என அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கிரிமினல் வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அசுதோஷ் யாதவ் என்பவர் குற்றவியல் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர் இந்து முறைப்படி நடைபெற்ற தனது திருமணத்தில் ‘கன்னிகாதானம்’ செய்யப்படவில்லை என்றும், இதுதொடர்பாக தலைமை மற்றும் குறுக்கு விசாரணையின்போது இரு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும், மறுவிசாரணையின் மூலம் மட்டுமே அவற்றைத் தெளிவுபடுத்த இயலும்.
எனவே, சாட்சிகளை மறுவிசாரணை செய்ய அனுமதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். மனு மீது விசாரணை நடத்திய அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, “ஒரு வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்க குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு (CrPC) 311-ன் கீழ், சாட்சிகளை மீண்டும் அழைத்து மறுவிசாரணை நடத்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இந்த வழக்கில், சாட்சிகளைத் திரும்ப அழைத்து விசாரணை செய்வதற்குத் தேவை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தெரிவிக்கையில், “இந்து திருமணச் சட்டத்தின்படி இந்து முறைப்படி நடக்கும் திருமணம் நிறைவு பெற்றதாகக் கருதுவதற்கு, நெருப்பின் முன் மணமகனும், மணமகளும் இணைந்து 7 அடி எடுத்து வைத்துச் சுற்றிவரும் ‘சப்தபதி’ எனும் சடங்கு மட்டுமே போதுமானது. கன்னிகாதானம் செய்யப்பட்டதா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கன்னிகாதானம் என்றால் என்ன?
இந்து முறைப்படி நடைபெறும் திருமணங்களில் இது முக்கிய சடங்காக பாவிக்கப்படுகிறது. மணப்பெண்ணின் தந்தை தன் மகளின் கையை மணமகனின் கை மேல் வைத்து, தானமாக மணமகனிடம் ஒப்படைக்கும் சடங்குதான் கன்னிகாதானம்.
ஒரு தந்தை, தன் மகளை மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது வம்சத்தை விருத்தி செய்வதற்காக தானம் அளிப்பதையே கன்னிகாதானம் எனும் பாரம்பர்யம் குறிக்கிறது. திருமணத்தை உறுதிசெய்ய அது அவசியமில்லை. எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.