ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

சென்னை: எம்ஜிஆர் கழக நிறுவனரும், சினிமா தயாரிப்பாளரும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98.

அப்போலோ மருத்துமவனையில் இருந்த அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.

எம்ஜிஆர் கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன். வயது முதிர்வுகாரணமாக உடல்நலக் குறைவுஏற்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று பிற்பகல்காலமானார். மருத்துவமனையில் இருந்த வீரப்பன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் வீரப்பன் இல்லத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொன்னையன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த ஆர்.எம்.வீரப்பன் கடந்த1926-ம் ஆண்டு செப்.9-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக் கோட்டை என்ற கிராமத்தில் பிறந்தார். இளமைக் காலத்தில் எம்ஜிஆருடன் திரைத்துறையில் பணியாற்றிய அவர், எம்ஜிஆருடன் திமுகவில் இணைந்தார். எம்ஜிஆர் திமுகவை விட்டு நீக்கப்பட்டு 1972-ல்அதிமுகவை தொடங்கியபோது அவருடன் இருந்தவர்களில் முக்கியமானவர் ஆர்.எம்.வீரப்பன்.

1977-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்ஜிஆர் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தபோது, செய்தி மற்றும் அறநிலையத் துறை,உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப்பின், அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது ஜானகி அணியில் சேர்ந்து, அவருக்கு பக்கபலமாக செயல்பட்டார். பின்னர் ஜெயலலிதாஅமைச்சரவையில் கல்வி, இளைஞர் நலத்துறை, உணவுத் துறைகளின் அமைச்சராக செயல்பட்டார். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமைச்சர் பதவியில் இருந்தும் அதன்பின் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து, 1995-ம் ஆண்டு எம்ஜிஆர் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.

கடந்த 1953-ல் எம்ஜிஆர் தொடங்கிய நாடக மன்றம் மற்றும் திரைப்பட நிறுவனத்தை நிர்வகித்து வந்த வீரப்பன், 1963-ம் ஆண்டு சத்யா மூவீஸ் என்ற சினிமா பட நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் சார்பில் எம்ஜிஆர்நடித்த இதயக்கனி, ரிக் ஷாக்காரன்ரஜினி நடித்த பாட்ஷா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்தார்.

இதுதவிர கம்பன் கழகம் மற்றும்ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவராகவும் இருந்தார். இவருக்கு ராசம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது மூத்த மகள் செந்தமிழ்ச்செல்வியின் கணவர் தியாகராஜன் சத்யஜோதி பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் செந்தாமரை, தமிழரசி என்ற மகள்களும், தமிழழகன், செல்வம், தங்கராஜ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

ஆர்.எம்.வீரப்பன் உடல் தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன்பின், மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.