ஹரியானாவில், காதலி பிரிந்த காரணத்துக்காக 25 வயது இளைஞர் வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
போலீஸ் விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் பெயர் சிவம் என்று தெரியவந்திருக்கிறது. இவரின் தந்தை சஞ்சய் பட்நாகர், ஜாக்கோபுராவிலுள்ள கிருஷ்ணர் கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றிவருகிறார்.
சிவம் நீண்ட நாள்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், திடீரென காதலி பிரிந்து சென்றதால் மனமுடைந்த சிவம், நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்திருக்கிறார். இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், “கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6:45 மணியளவில் சிவம், வீட்டில் தன் தந்தை இல்லாத நேரம் பார்த்து தன் நண்பர் ஆகாஷுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பியிருக்கிறார். அதில், `அப்பா என்னை மன்னித்து விடுங்கள், நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைப்பார்த்த ஆகாஷ், சிவத்தின் தந்தை சஞ்சய் பட்நாகரை தொடர்பு கொண்டு இதைத் தெரிவித்திருக்கிறார். பின்னர் உடனடியாக, இரண்டு பேருடன் வீட்டுக்கு வந்த சிவத்தின் தந்தை, கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, சிவம் மின்விசிறியில் தூக்குபோட்டுத் தொங்கியிருந்தார். பின்னர், உடனடியாக சிவத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்” என்றார்.
அதையடுத்து, சிவத்தின் தற்கொலைக் குறிப்பில் இடம்பெற்றிருந்த அவரின் காதலி மற்றும் நண்பர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34, 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். இதற்கிடையில், தன்னுடைய மகன் தற்கொலை செய்வதற்கு முன் காதலியிடம் பேசியதாகவும், அதன்பிறகே தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸில் சஞ்சய் பட்நாகர் தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்குப் பின், உடலை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீஸார், அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.