நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஏப்ரல் 11-ம் தேதி நாமக்கல் வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரமத்தி வேலூரில் பேசியபோது, “15 சீட், 1,000 கோடியும் தருவதாக கூட்டணிக்கு கூப்பிட்டாங்க. ஆனால் நான் போகல” எனக் கூறியிருக்கிறார் சீமான்.
சீமான் பேசும்போது, “தொடர்ந்து அ.தி.மு.க தி.மு.க-வுக்கு வாக்களித்து ஓட்டுபோட்டு எங்களை ரோட்டுல போட்டதுதான் மிச்சம். மக்கள்மீதான அக்கறையில்தான் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பரப்புரை செய்கிறோம். 15 ஆண்டுக்காலமாக களத்தில் போராடும் எங்களுக்கு என்ன கொடுத்தீர்கள்..? கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி..? ஒரு இழவும் கொடுக்கவில்லை. ஆனால் இதையெல்லாம் கொடுக்கிறேன் என கூட்டணிக்கு அழைத்தார்கள்.
1,000 கோடி ரூபாய், 15 சீட்… 2026-ல் நீங்கள்தான் முதலமைச்சர் எனக் கூப்பிட்டார்கள்.. குடும்பத்துக்குத் தனியாகப் பணம், கட்சிக்கு தனியாக நிதி தருகிறோம் என்றார்கள். தெருக்கோடியில்கூட நிற்பேன். ஆனால் உங்களோடு வரமாட்டேன் என மறுத்தேன்” எனப் பேசினார்.
`சீமானுக்கு 1,000 கோடியும் 15 சீட்டும் தருவதாகச் சொன்னது எந்தக் கட்சி?’ என சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் கிளம்பியிருக்கிறது.