அரை டன் பழமாலை முதல் `ஷிஹ் சூ' வகை நாய் பரிசு வரை… களைகட்டும் தென்சென்னை தேர்தல் பிரசாரம்!

தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்தனும், பா.ஜ.க சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாகி இருக்கிறது தென்சென்னை. அதன்படி, தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்கள் மக்களை கவர, விதவிதமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசாரத்தில் தமிழச்சி

இந்நிலையில், தி.மு.க வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன், தான் தத்தெடுத்திருந்த சோழிங்கநல்லூர்- சித்தாலப்பாக்கம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதி தி.மு.க சார்பில், அரை டன் எடைகொண்ட பழங்கள் அடங்கிய மாலையை அணிவித்து தமிழச்சியை வரவேற்றனர். அப்போது பேசிய தமிழச்சி, “சித்தாலப்பாக்கம் கிராமத்தை தத்தெடுத்து, திறந்தவெளி கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, உயர்மின் கோபுர விளக்குகள் அமைத்துள்ளேன். குளங்கள் சீரமைத்து, பள்ளிகளுக்கு கழிவறை கட்டடம் கட்டியுள்ளேன். தொகுதிக்குள் உள்ள 7 ஊராட்சிகளில் முதன்மையானதாக சித்தாலப்பாக்கம் மாறியுள்ளது.” என்றார்.

தொடர்ந்து அவருக்கு அப்பகுதி தி.மு.க சார்பில், ‘ஷிஹ் சூ’ வகை நாய் குட்டி பரிசளிக்கப்பட்டது.

பிரசாரத்தில் ஜெயவர்தன்

அதேபோல, அ.தி.மு.க வேட்பாளரான ஜெயவர்தன், வேளச்சேரி பகுதியில் நடைப்பயணமாகவும், திறந்தவெளி ஜிப்பிலும் வாக்கு சேகரித்தார். அப்போது, “தென்சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடல் நீரை குடிநீராக்கம் திட்டம் கொண்டு வந்தேன். இதேபோல பல நல்ல திட்டங்களை கொண்டுவர எனக்கு வாக்களியுங்கள்” என்று பேசினார்.

பிரசாரத்தில் தமிழிசை

அதேபோல, மயிலாப்பூர் தொகுதியில் வாக்கு சேகரித்த பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை, “சமீபத்தில் தி.நகரில் நடந்த பிரதமரின் ரோடு ஷோவுக்கு மக்களை வரவிடாமல் திமுக தடைசெய்தது. ஆனால், அதையும் தாண்டி, மக்கள் அங்கு வந்தனர். தென்சென்னையில் அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே இந்தமுறை தென்சென்னை பா.ஜ.க-வின் தொகுதியாகும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.