டி20 உலக கோப்பை: துபேவை தேர்வு செய்வது உங்கள் விருப்பம்…ஆனால் இந்தியா வெல்ல அதை செய்ய வேண்டும் – பிளெமிங்

சென்னை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. அதில் 2007-க்கு பின் இம்முறையாவது இந்தியா டி20 உலக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா கடந்த 10 வருடமாக ஒரு ஐ.சி.சி. கோப்பையை கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது. குறிப்பாக நம்பர் 1 அணியாக இருந்தும் அழுத்தமான ஐ.சி.சி. நாக் அவுட் போட்டியில் ஏதோ ஒரு வகையில் சொதப்பும் இந்தியா தோல்வியை சந்தித்து வருகிறது. இருப்பினும் இம்முறை ஷிவம் துபே, ரிங்கு சிங் போன்ற நல்ல பார்மில் இருக்கும் இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கடந்த வருடம் சி.எஸ்.கே. 5-வது கோப்பையை வெல்ல உதவிய சிவம் துபே இந்த வருடமும் அபாரமாக விளையாடி வருகிறார். எனவே அவர் கண்டிப்பாக உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று சேவாக், யுவராஜ் சிங் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஷிவம் துபேவை இந்தியா தேர்வு செய்யலாம் என்று தாம் சொல்வது ஒருதலைபட்சமாக இருக்கும் என்று சி.எஸ்.கே. கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார். எனவே அவரை தேர்வு செய்வது உங்கள் விருப்பம். மேலும் உலக கோப்பையை வெல்வதற்கு முதலில் சூழ்நிலையை பார்த்து தங்கள் வீரர்களின் பலத்தை அறிந்து எந்த ஸ்டைலில் விளையாட வேண்டும் என்பதை இந்தியா முடிவு எடுக்க வேண்டும் என கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

“என்னைப் பொறுத்த வரை உலக கோப்பையின் போது இந்தியா எந்த வகையான திட்டத்தை விரும்புகிறார்கள்? வெளிநாட்டில் விளையாடும்போது எது பொருந்தக்கூடிய ஸ்டைலாக இருக்கும்? என்பதை அவர்கள் அடையாளம் கண்டு விளையாட வேண்டும். அதை கண்டறிந்த பின் அதற்குத் தகுந்த வீரர்களை போடுங்கள். எனவே நானாக இருந்தால் முதலில் எந்த ஸ்டைலில் விளையாட வேண்டும் என்பதை பார்ப்பேன். பின்னர் அதற்கு தகுந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களிடம் இதைப் பற்றி தகவல் கொடுப்பேன். இந்த டிசைனில் வெற்றி பெறுவதற்கான வேலையையும் அவர்களுக்கு கொடுப்பேன்.

துபேவின் பவர் எனக்கு பிடித்துள்ளது. ஆனால் அவரைப் பற்றி நான் சொன்னால் ஒருதலைபட்சமாக இருக்காதா? இருப்பினும் வித்தியாசமான பவரை கொண்டுள்ள அவரை என்னுடைய அணியில் தேர்ந்தெடுப்பேன். கடந்த வருடம் கடினமாக உழைத்த அவரை இம்பேக்ட் வீரர் விதிமுறையை வைத்து பயன்படுத்த வேலை செய்தோம். அத்துடன் அவர் தாம் எந்த அளவுக்கு திறமையானவர் என்பதை உணர்ந்தது முக்கியம். அப்போதிலிருந்து அவர் வேற லெவலுக்கு சென்று விட்டார். ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக தடுமாறியதற்காக அவர் விமர்சிக்கப்பட்டார். அவருக்குள் இன்னும் நிறைய திறமை இருக்கிறது” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.