பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்த ஐதராபாத்: 287 ரன்கள் குவித்து மீண்டும் வரலாற்று சாதனை

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 30வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதி வருகின்றன. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதையடுத்து, ஐதராபாத் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெண்ட்ரிச் கிளாசனுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் பெங்களூரு பந்து வீச்சை சிதறடித்தார். அவர் 39 பந்துகளில் சதம் விளாசினார். ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உள்பட 102 ரன்கள் குவித்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். ஆனால் மறுமுனையில் ஹெண்ட்ரிச் கிளாசனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 31 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் உள்பட 67 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய மார்க்ரம், அப்துல் சமத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி கட்டத்தில் இருவரும் பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்கள் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்களுடனும், சமத் 10 பந்துகளில் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

287 ரன்கள் குவித்ததன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிர ரன்கள் குவித்த அணி தங்கள் முந்தையை சாதனையை ஐதராபாத் மீண்டும் தகர்த்துள்ளது. முன்னதாக ஐ.பி.எல். இல் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணியாக ஐதராபாத் இருந்தது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 277 ரன்கள் எடுத்ததே ஐ.பி.எல். தொடரில் ஒரு இன்னிங்சில் ஒரு அணி எடுத்த அதிக ரன்களாக இருந்தது. தற்போது தங்கள் சொந்த சாதனையையே ஐதராபாத்தே மீண்டும் முறியடித்துள்ளது. பெங்களூருவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 287 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை ஐதராபாத் நிகழ்த்தியுள்ளது. 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பெங்களூரு களமிறங்க உள்ளது


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.