மோடி மீண்டும் பிரதமராக 64% ஆதரவு: இணைய கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 64% பேரும், ராகுல் காந்தி பிரதமராக 21.8% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக, டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 44.1% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடிக்கு 43.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக டெய்லிஹன்ட் நிறுவனம், ஆன்லைனில் கருத்துக் கணிப்புகளை நடத்தியது. இதில், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்த கருத்துக் கணிப்புகள் ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டுள்ளன. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு வயது வித்தியாசங்கள் கொண்ட வாக்காளர்கள் 77 லட்சம் பேர் பங்கேற்று பதில் அளித்துள்ளனர். அதன் முடிவுகளை டெய்லிஹன்ட் வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

> நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக 61% பேர் தெரிவித்துள்ளனர். பாஜக தலைமையிலான அரசுதான் மீண்டும் மத்தியில் அமையும் என்று 63% பேர் தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 64% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி பிரதமராக 21.8% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யார் பிரதமராக விருப்பம்? – மோடி மீண்டும் பிரதமராக டெல்லி வாக்காளர்களில் 57.7% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் 24.2% பேர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் இங்கு மோடிக்கு 78.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 10% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு 62.6% ஆதரவும், ராகுல் காந்திக்கு 19.6% ஆதரவும் உள்ளது.

> தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 44.1% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடிக்கு 43.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரளாவில் மோடிக்கு 40.8% ஆதரவும், ராகுல் காந்திக்கு 40.5% ஆதரவும் உள்ளது. தெலங்கானாவில் மோடிக்கு 60.1% ஆதரவும், ராகுல் காந்திக்கு 26.5% ஆதரவும் உள்ளது. ஆந்திராவில் மோடிக்கு 71.8% ஆதரவும், ராகுல் காந்திக்கு 17.9% ஆதரவும் உள்ளது.

செயல்பாடுகள் எப்படி? – மோடி அரசின் நிர்வாக செயல்பாடு குறித்த கேள்விக்கு, 61% பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். 21% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பொருளாதார செயல்பாடு குறித்த கேள்விக்கு 53.3% பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். 20.9% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

  • பிரதமர் மோடி அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மீது 52.6% பேர் திருப்தியும், 28.1% பேர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்
  • நாட்டின் வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் மோடி அரசின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக 64% பேரும், அதிருப்தி அளிப்பதாக 14.5% பேரும் தெரிவித்துள்ளனர்.
  • நெருக்கடியைக் கையாளுவதில் மோடி அரசின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக 63.6% பேர் தெரிவித்துள்ளனர். அதிருப்தி அளிப்பதாக 20.5% பேர் தெரிவித்துள்ளனர்.
  • மோடி அரசின் நலத்திட்டங்கள் மீது 53.8% பேர் திருப்தியையும், 24.9% பேர் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.