மதுரை: `கணவரை இழந்துவிட்டார் என்பதால் செங்கோல் வழங்க கூடாதென்பதா?'- வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் விழாவின் 8-ம் நாளில் பட்டாபிஷேகம் அன்று செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில், கணவரை இழந்தவருக்கு செங்கோல் வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முதன்முறையாக புதிதாக நியமிக்கப்பட்ட 5 அறங்காவல் உறுப்பினர்களில் 3 பேர் பெண்களாகவும், அதில் மறைந்த முன்னாள் அமைச்சர் பழனிவேல் ராஜனின் மனைவி ருக்மணி அம்மாள் அறங்காவல் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். பெண் தெய்வம் ஆட்சி செய்யும் மீனாட்சியம்மன் கோயிலில், அக்கோயிலை நிர்வாகம் செய்யு பெண் தலைமையேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. அதேநேரம் இந்த நியமனம், பழைமைவாத சிந்தனைகொண்ட சிலருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படும் என்பதால், அவர்களால் தங்கள் கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த தினகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் ஒவ்வொரு நிகழ்விலும், ஆகம விதிகள் முறையாகப் பின்பற்றப்படும். விழாவின் 8-ம் நாளான பட்டாபிஷேகம் அன்று, செங்கோல் மீனாட்சியம்மனின் கைகளில் ஒப்புவிக்கப்படும்.

அறங்காவலர் குழுவினர்

அந்த செங்கோலை அறங்காவலர் குழு தலைவர் பெற்றுக் கொள்வார். ஆகம விதியின்படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக்கொள்ள இயலாது.

தற்போது மீனாட்சியம்மன் கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் ருக்மணி பழனிவேல் ராஜன், கணவரை இழந்தவர் என்பதால், கோயிலின் ஆகம விதிகளை பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. கோயில் செயல் அலுவலர் அல்லது பரம்பரை பட்டர் குடும்பத்தினர் போன்ற தகுதியான நபரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, “இது போன்ற மனுவை ஏற்கெனவே உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

அதையடுத்து, “திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தக்கார் ருக்மணி அம்மாளுடன் அறங்காவல் உறுப்பினர்கள்

மேலும், “கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும்தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்துதானே, விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ள கடைசி நேரத்தில் வழக்கை தொடர்ந்திருப்பது ஏன்… இந்தக் காலத்திலும் இதுபோல கருத்துகளை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல” எனக் குறிப்பிட்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.