புதுச்சேரி – பாகூர் வாக்குச்சாவடியில் தாமரைப் பூ அலங்காரம் அகற்றம் | இடதுசாரிகள் எதிர்ப்பு எதிரொலி

புதுச்சேரி: புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவற்றை தேர்தல் அதிகாரிகள் அகற்றி அப்புறப்படுத்தினர்.

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நேரிலும், சமூக வலைதளம் மூலமாகவும் யாரும் வாக்கு கேட்கக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிமுறையை மீறி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கிறார்களா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிகளில், வாக்குப் பதிவுக்கான முன்னேற்படுகளை தேர்தல் துறையினர் செய்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை வரவேற்க கூடிய வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவத்தில் நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்ட பாகூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விஜயபாலன், மணிவண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சரவணன், முருகையன் மற்றும் பொதுமக்கள் இன்று அந்த வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் தேர்தல் விதிமுறையை மீறி, பாஜக சின்னமாக தாமரை பூக்கள் வடிவத்தில் பிங்க் மற்றும் வெள்ளை நிரத்தில் பேப்பர் பூக்களால் நுழைவு வாயிலில் அலங்கரிக்கப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தாமரை பூ வடிவிலான பேப்பர் பூக்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த பூக்களை அங்கிருந்த மற்றொரு அறையில் வைத்து பூட்டி சீல் வைத்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.