2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 8,655 வழக்கு: உயர் நீதிமன்ற கிளையில் டிஜிபி தகவல்

மதுரை: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 2019 மக்களவைத் தேர்தலில் 4,349 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 8,655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவில், தன் மீதான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது. அந்தக் காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வாக்காளர்களுக்கு பணம், பரிசு வழங்குவது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்த்துவிடும் செயலாகும். இந்த குற்றத்துக்கான தண்டனை குறைவாக இருப்பதால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரித்து வருகிறது. எனவே, 2019 மக்களவைத் தேர்தல், 2021சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

2019-ல் 4,349 வழக்குகள்: இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.டிஜிபி தரப்பில், 2019 மக்களவைத் தேர்தலில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 4,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் 1,733 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்கள் தொடர்பாக 8,655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில்1,414 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுமீதான தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.