ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்

சென்னை: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. முற்பகல் 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலைப் புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள்: சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5,200 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் விவசாய நிலங்கள், நீர் நிலைகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகள் என பல இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக இந்த விமான நிலையத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் போராட்டம் 625 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இவர்கள் போராட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், 1400 வாக்காளர்கள் உள்ள ஏகனாபுரம் கிராமத்தில் இன்று இதுவரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் அளித்த 9 பேர் அளித்த வாக்குகள் மட்டுமே அங்கு பதிவாகியுள்ளது. மக்கள் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு வாக்களிக்கும்படி தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகளை அளித்து அவர்களை வாக்களிக்கச் செய்ய அதிகாரிகள் சென்றபோது அந்த கிராமத்தில் இருந்து யாரும் வாக்களிக்க முன் வராததால் அதிகாரிகள் திரும்பினர் என்பது நினைவுகூரத்தக்கது.

ஓசூரில் 3 இடங்கள்: ஓசூர் அடுத்துள்ள கருக்கனஹள்ளி உள்ளிட்ட 3 இடங்களில் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள கருக்கனஹள்ளி கிராமத்தின் வழியாக பெங்களூர்- தருமபுரி புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருக்கனஹள்ளி கிராமத்தில் விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைதுறையினர் சிறிய வாகனங்கள் சென்று வர தரைப்பாலம் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், உயர்மட்ட பாலம் அமைத்து கொடுக்க வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பதாக கிராமம் முழுவதும் கருப்பு கொடிக்கட்டிம், பேனர்கள் வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே இன்று அக்கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையத்திற்கு காலை 7 மணி முதல் கிராம மக்கள் ஒருவர் கூட வந்து வாக்களிக்க வராததால், வாக்குசாவடி மையம் வெறிச்சோடி உள்ளது.

இதே போல் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கெலமங்கலம் ஒன்றியம், மேலுரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில்உள்ள தொளுவப்பெட்டா, டி.பழையூர், குள்ளட்டி, கொண்டனூர், தொட்டதேவனப்பள்ளி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த மலைகிராமங்களில், சாலை,குடிநீர், குடியிருப்புகள் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்கவில்லை எனவும். மேலும் தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதாக பெய்யான வாக்குறுதி அளிப்பதாகவும், இதனால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததல், மக்களவை தேர்தலை புறக்கனிப்பாக அப்பகுதியில் அமைத்துள்ள 2 வாக்குசாவடி மையங்களுக்கு காலை 10.30 மணி வரை ஒருவர் கூட வாக்களிக்கவில்லை,

ஓசூர் அருகே காரண்டப்பள்ளி ஊராட்சி கட்சுவாடி, சிந்தாமணி தொட்டி, ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 350 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து கொடுக்கவில்லை எனவும், கிராமத்தில் சுற்றி இயங்கி வரும் கல்குவாரி கிரஷர்களால் விளை நிலங்களும், குடியிருப்பு பகுதிகளும் பாதிக்கபடுவதாகவும் இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக இதுவரை ஒரு வாக்கு கூட பதிவு செய்யாமல் புறக்கணித்துள்ளனர். இந்த பகுதிகளிலும்க தேர்தலை புறக்கணித்துள்ள கிராம மக்களிடம் அரசு அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை செய்து வருகின்றனர்

வெறிச்சோடிய வேங்கைவயல், இறையூர்… புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் மற்றும் வேங்கைவயல் கிாரம மக்கள் வாக்களிக்கக்கூடிய வாக்குச்சாவடியில் இதுவரை யாரும் வாக்களிக்காததால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022-ல் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் நேரடி சாட்சி யாரும் இல்லாததால் அறிவியல் ரீதியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மனிதக் கழிவை கலந்தவர்கள் யாரென விரைவாக கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி வேங்கைவயல் மற்றும் இறையூர் மக்கள் தனித்தனியாக போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இறையூர் மற்றும் வேங்கைவயல் கிாரம மக்கள் வாக்களிக்கக்கூடிய வாக்குச்சாவடியில் இதுவரை யாரும் வாக்களிக்காததால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இந்த வாக்குச்சாவடியை பதற்றமான வாக்குச் சாவடியாக கணக்கில் கொண்டு, நுண்பார்வையாளர் மூலம் கண்காணிப்பு, துணை ராணுவம் மூலம் பாதுகாப்பு என பலத்த பாதுகாப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 549 வாக்காளர்கள் வாக்களிக்கக்கூடிய இந்த வாக்குச்சாவடியில் காலை வரையில் வேங்கைவயல் மற்றும் இறையூர் மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடிக் காணப்படுகிறது. எனினும், தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக இரு கிராமங்களைச் சேர்ந்தோரும் அறிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக, வருவாய்த் துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, “முத்துக்காடு கிராமத்தில் இருந்து ஒரு வாக்கு மட்டும் இடிசி மூலம் அந்த வாக்குச்சாவடியில் பதிவாகி உள்ளது. மற்றபடி வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களைச் சேர்ந்தோர் வாக்களிக்கவில்லை. எனினும், இரு கிராமங்களைச் சேர்ந்தோரிடமும் பேசி, அனைவரையும் மாலைக்குள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கழிவுநீர் பிரச்சினை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணியில் சாலை வசதி இல்லாதது, இளையான்குடி நகர் பகுதி கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கல்லூரணியில் உள்ள அவர்களுக்கான வாக்குச் சாவாடியில் ஒரு வாக்கு கூட அவர்கள் பதிவு செய்யவில்லை. இதை கவனித்த கல்லூரணி கிராம மக்களும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்களிக்களிக்க மறுத்தனர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் 4 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மொத்தம் அந்த வாக்குச்சாடியில் சீத்தூரணி, கல்லூரணியைச் சேர்ந்த 850 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆனால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இந்த மக்கள் தங்களுக்கான நியாயம் கேட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் புறக்கணிப்பு மிகப் பெரிய கவன ஈர்ப்பு என்றாலும் கூட மாலைக்குள் அவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செய்தி: ஜெயகாந்தன்.கே, சுரேஷ்.கே, ஜெகநாதன்.இ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.