“ஒவ்வொரு வாக்கும் முக்கியம்; சாதனை அளவை எட்ட வாக்களியுங்கள்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியிருக்கும் நிலையில், இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு ( ஏப். 19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழகம் மட்டுமன்றி புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளிலும் இன்றுகாலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!” எனப் பதிவிட்டுள்ளார். ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, பெங்காலி மற்றும் அஸ்ஸாமி ஆகிய ஆறு மொழிகளிலும் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.