ஈராக்கில் உள்ள ராணுவ படைத்தளம் மீது டிரோன் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

பாக்தாத்,

ஈராக் நாட்டில் உள்ள பாபில் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் ‘கல்சு முகாம்’ என்ற பெயரில் மிகப்பெரிய ராணுவ படைத்தளம் அமைந்துள்ளது. இது ஈராக் ராணுவம், காவல்துறை மற்றும் ஹஷத் ஷாபி படைகளின் படைத்தளமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை இந்த படைத்தளத்தின் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஹஷத் ஷாபி படையைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலால் அங்கு தீ விபத்தும் ஏற்பட்டது.

இதையடுத்து மீட்பு படைகளும், தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஈராக் அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

அதே சமயம் ஹஷத் ஷாபி படைகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ராணுவ படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.