தூபேவின் பலவீனம் 'இதுதான்…' கட்டம் கட்டி தூக்கிய கேஎல் ராகுல் – சிஎஸ்கேவின் பிளேஆப் கனவுக்கு ஆப்பு?

CSK Shivam Dube Weakness Exposed: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) நேற்று லக்னோவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து, நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) தனது மூன்றாவது தோல்வியை பதிவுசெய்தது. இதற்கு முன் விசாகப்பட்டினத்தில் டெல்லி அணியிடமும், ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணியிடமும் தோல்வியடைந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதிருந்தது. 

அந்த நம்பிக்கையுடன் நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants) அணியை அதன் சொந்த மண்ணான லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் எக்னா மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் பலவீனமாக காணப்பட்டது. இதனால் லக்னோ அணியிடம் முழுவதுமாக சரணடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலக்கை துரத்திய லக்னோ அணியின் ஓப்பனர்கள் முதல் 15 ஓவர்கள் பேட்டிங் செய்ததே சிஎஸ்கேவின் பலவீனமான பந்துவீச்சுக்கு உதாரணமாகும். 

சிஎஸ்கேவின் பலவீனமான பந்துவீச்சு

சிஎஸ்கே அணியால் விக்கெட்டை கைப்பற்றவே இயலவில்லை. பதிரானாவின் (Pathirana) பந்துவீச்சையும் அவர்கள் சமாளித்து விளையாடிவிட்டதால் விக்கெட் எடுக்கக்கூடிய பந்துகளை சிஎஸ்கே பௌலர்கள் வீசவில்லை. சில நல்ல கேட்ச் வாய்ப்பையும் தவறவிட்டனர். பவர்பிளேயிலும் ரன்களை வாரி வழங்கினர். மொயின் அலிக்கு பவர்பிளேவில் ஒரு ஓவரை கொடுத்திருக்கலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். ஏனென்றால், டி காக் ஒருமுனையில் சொதப்பலாக பேட்டிங் செய்து வந்தார். அவர் கடைசியில் 43 பந்துகளை பிடித்து 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில் 1 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளே அடங்கும். கேஎல் ராகுல் (KL Rahul) நேற்று சிறப்பாக விளையாடி  53 பந்துகளில் 82 ரன்களை குவித்தார்.

மோசமான தொடக்கம்

சிஎஸ்கேவின் பந்துவீச்சு இப்படி அம்பலப்பட்டது என்றால் பேட்டிங்கோ அதைவிட மோசம். பவர்பிளேவிலேயே இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது சிஎஸ்கே. சேப்பாக்கத்திற்கு வெளியே ரச்சின் ரவீந்திராவின் மோசமான ஃபார்ம் நேற்றும் தொடங்கியது. கான்வே இனி வரமாட்டார் என்பதால் ரச்சின் தனது ஆட்டத்தை மேருகேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ருத்ராஜ் கெய்க்வாட்டும் (Ruturaj Gaikwad) நேற்று விரைவாகவே ஆட்டமிழக்க பவர்பிளேவிலேயே ஜடேஜா உள்ளே வந்து நிதான காட்ட தொடங்கிவிட்டார். 

தோனியின் அதிரடியே ஆறுதல்

24 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் ரஹானே 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தூபே, ரிஸ்வி ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மொயின் அலி பிஷ்னோய் வீசிய 18வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து ஆறுதல் அளித்தார். இதற்கிடையில் ஜடேஜா தனது நிதான (?) அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். மொயின் ஆட்டமிழக்க 18வது ஓவரின் கடைசி பந்தில் தோனி (MS Dhoni) களமிறங்கினார். அவர் கடந்த சில போட்டிகளை போலவே அதிரடி மோடில் வந்தார். அவர் 9 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 28 ரன்களை அடித்தார். இதனால்தான் சிஎஸ்கே ஒரு ஆறுதலான ஸ்கோரையாவது எட்டியது. இல்லையெனில் லக்னோ இன்னும் விரைவாகவே வெற்றியடைந்திருக்கும். 

வெளிச்சத்திற்கு வந்த தூபேவின் பலவீனம்

இதில் சிவம் தூபே (Shivam Dube) பலவீனம்தான் மிகவும் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்தது. லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் அவருக்கு என தனி பிளான் வைத்திருந்தார். இரண்டு முனைகளில் இருந்து வேகப்பந்துவீச்சாளர்கள் வீசினர். யாஷ் தாக்கூர் (Yash Thakur) மெதுவான ஷார்ட் பால்களை வீசி தூபேவை தடுமாறவைத்தார். தூபேவால் மிடில் ஆப் தி பேட்டில் அடிக்க இயலவில்லை.

ராகுல் போட்ட பிளான்

அடுத்த ஓவரே ஸ்டாய்னிஸை கொண்டு வந்தார், ராகுல். அந்த 12வது ஓவரின் முதல் பந்தை ஸ்டாய்னிஸ் 125.4 கி.மீ வேகத்தில் ஷார்ட் பாலாக ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வீச, தூபே அதனை புல் ஷாட் ஆட முயன்றார். ஆனால், அது எட்ஜ் பட்டு ஷார்ட் பாய்ண்டில் ராகுலிடம் கேட்சாக சென்றது. யாஷ் தாக்கூர் ஓவரில் ராகுல் செட் செய்த நிலையில், அது ஸ்டாய்னிஸ் ஓவரின் முதல் பந்திலேயே பலனை அளித்தது. 

இதுகுறித்து இந்திய அணியன் மூத்த வேகப்பந்துவீச்சாளரான இர்பான் பதான் (Irfan Pathan) தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,”அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் அவரின் ஷாட் குறித்து நான் நீண்ட காலமாக பலமுறை கூறியுள்ளன. கடைசியாக, ஒரு பவுலர் தூபேவுக்கு எதிராக அதை பயன்படுத்தியுள்ளார்” என குறிப்பிட்டிருந்தார். 

That shot outside the off stump line I have been talking abt since long now. Finally a bowler use that against Dube.

— Irfan Pathan (@IrfanPathan) April 19, 2024

பிளே ஆப் வாய்ப்பு

சிஎஸ்கே அணிக்கு நடப்பு சீசனில் அதிக ரன்களை குவித்தவர் தூபேதான். அவர் 7 இன்னிங்ஸ்களில் 245 ரன்களை 157.1 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். அதில் இரண்டு அரைசதங்கள் அடக்கம். அவரின் இந்த பலவீனத்தை எதிர் அணிகள் கைக்கொள்வதன் மூலம் சிஎஸ்கே அணி தனது பிளே ஆப் வாய்ப்பையை இழக்க நேரிட அதிக வாய்ப்புள்ளது. 17வது இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4இல் வெற்றி, 3இல் தோல்வியை பெற்றுள்ளது. வரும் 23ஆம் தேதி சிஎஸ்கே அணி, இது லக்னோ அணியை சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. 

மேலும் படிக்க | IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.