செர்பியா: 25 ஆண்டுகளுக்கு முன் வீசிய நேட்டோ வெடிகுண்டு நீக்கம்

நிஸ்,

செர்பியா நாட்டின் தெற்கே அமைந்த நிஸ் என்ற நகரத்தில் கட்டுமான பணி நடந்து வந்த இடத்தில் ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள 1,300 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன்பின் அந்த வெடிகுண்டு அகற்றப்பட்டது. அது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படும் என உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி லூகா காசிக் கூறியுள்ளார்.

செர்பியா நாட்டின் மீது, 1999-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலின்றி நேட்டோ படைகள் குண்டுமழை பொழிய தொடங்கின. இந்த தாக்குதல் 78 நாட்கள் வரை நீடித்தது. மே 7-ந்தேதி நடந்த தாக்குதலில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதன்பின்பு, மே 12-ந்தேதி நடந்த மற்றொரு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். இதில், வெடிக்காமல் இருந்த வெடிகுண்டு ஒன்று மீதம் இருந்துள்ளது. 430 கிலோ அளவுக்கு வெடிக்க கூடிய வெடிபொருட்களை இந்த வெடிகுண்டு கொண்டுள்ளது என காசிக் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ குழுவினரும் அந்த பகுதிக்கு வந்து சேர்ந்தனர். வெடிகுண்டு பாதுகாப்பாக வேறிடத்திற்கு எடுத்து செல்லப்படும் பணியை அவர்கள் உறுதி செய்வர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.