இஸ்ரேல் படைமீது பொருளாதாரத் தடை விதிக்கிறதா அமெரிக்கா? – எதிர்க்கத் தயாராகும் நெதன்யாகு!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்குப் பதிலடி என்ற பெயரில் காஸாவில் பொதுமக்களின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இடைவிடாது போர் நடத்திவருகிறது இஸ்ரேல். போரின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி செய்தது அமெரிக்கா. அதோடு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்

பின்னர், இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரிக்கவே, ஒரு கட்டத்தில் அமெரிக்காவும் பத்தோடு பதினொன்றாகப் போர்நிறுத்தம் வேண்டும் என மேலோட்டமாக வலியுறுத்தியது. பின்னர், ஐ.நாவில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் விட்டதால், இஸ்ரேலுக்கெதிரான போர்நிறுத்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் படை நடத்தும் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு வந்த பாடில்லை.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இஸ்ரேல் படையால் கைதுசெய்யப்பட்ட பாலஸ்தீன- அமெரிக்க நபர் உமர் அசாத் (78) உறைபனி நடுவே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் ஒரு பகுதியாகவே இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கப்போவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இஸ்ரேல் படைமீது அமெரிக்கா பொருளாதார தடைவிதிக்கும் பட்சத்தில் அமெரிக்கா ராணுவ உதவியைக் கொண்டு அவர்கள் ஆயுதங்கள் வாங்க முடியாது.

பைடன் – நெதன்யாகு

இதற்கு எதிர்முனையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு `இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மீது யாராவது பொருளாதாரத் தடை விதிக்க நினைத்தால், எனது முழு பலத்துடன் எதிர்த்துப் போராடுவேன்‘ என்றார். அதேபோல் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கல்லன்ட், `நெட்சா யெஹுடா பட்டாலியன் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நோக்கத்தை அமெரிக்கா திரும்பப்பெறும் என்று எதிர்பார்க்கிறேன். சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் நடவடிக்கையை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அமெரிக்கா அரசிடம் பேசுவேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.