கர்நாடகா: நேகா கொலையில் காங்கிரஸ் அரசு சமரச அரசியல் செய்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜுன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

28 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் 26ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதியும் நடைபெற உள்ளது.

முதற்கட்ட தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை ஆதரித்து தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, உப்பள்ளியில் காங்கிரஸ் கவுன்சிலரின் மகளான கல்லூரி மாணவி நேகா ஹிரேமட் (வயது 24) கல்லூரி வளாகத்தில் சகமாணவன் பாயாசால் (வயது 24) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்க்கு கண்டனம் தெரிவித்தார்.

வாகன பேரணியில் ஈடுபட்ட அண்ணாமலை பிரசாரத்தில் கூறுகையில், சமீபத்தில் உப்பள்ளியில் காங்கிரஸ் கவுன்சிலரின் மகளான நேகா ஹிரேமட் கல்லூரி வளாகத்தில் சக மாணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளது. துயரகரமான இந்த கொலை சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியின் வெட்கமற்ற அணுகுமுறை மிகவும் கவலையளிக்கிறது. காங்கிரசின் சமரச அரசியலால் அக்கட்சியின் ஆட்சியில் கர்நாடகாவில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.