இயக்குனர் 'பசி' துரை மறைவு

தமிழ் சினிமாவில் 70, 80களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் துரை. தமிழில் சில முக்கியமான படங்களை அவர் இயக்கியிருந்தாலும் 'பசி' துரை என்றே அழைக்கப்பட்டார்.

1979ம் ஆண்டு ஷோபா நடித்து அவர் இயக்கிய 'பசி' திரைப்படம் அந்தக் காலத்தில் சிறப்பான விமர்சனத்தைப் பெற்ற ஒரு படம். அந்த வருடத்தின் சிறந்த நடிகைகக்கான தேசிய விருதை ஷோபா பெற்றார். அந்த வருடத்தில் தமிழில் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதையும் பெற்ற படமாக அமைந்தது.

1974ல் வெளிவந்த 'அவளும் பெண்தானே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் துரை. ரஜினிகாந்த் நடித்த 'ரகுபதி ராகவ ராஜாராம், சதுரங்கம், ஆயிரம் ஜென்மங்கள்', கமல்ஹாசன் நடித்து பெரும் வெற்றியைப் பெற்ற 'நீயா' உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர்.

1981ல் இவர் இயக்கிய 'கிளிஞ்சல்கள்' படம் 25 வாரம் ஓடி வெள்ளிவிழா கண்டது. மோகன், பூர்ணிமா ஜெயராம் நடிக்க டி.ராஜேந்தர் இசையமைத்த படம் இது. சிவாஜிகணேசன் நடித்த 'துணை' படத்தையும் இயக்கினார். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் சுமார் 50 படங்களை இயக்கியுள்ளார்.

பாளையங்கோட்டையில் 1940ம் ஆண்டு பிறந்த துரை, நேற்று வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. மனைவி லலிதா, மகன்கள் பிரகாஷ், பிரமோத், மகள் சுனிதா ஆகியோருடன் சென்னையை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வசித்து வந்தார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.