புதுடெல்லி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசியரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 25,753 பேரை நியமனம் செய்த மாநில பணியாளர்கள் தேர்வாணையத்தின் (எஸ்எஸ்சி) ஆணையை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்து உள்ளது.
மேற்கு வங்க அரசு தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், “உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, 23,123 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்களின் நியமனத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதற்கு வழிவகுத்துள்ளது. இதுபோன்ற அவசரமான காலத்தில் அந்த விவகாரத்தை கையாளுவதற்கு மனுதாரரான மாநில அரசுக்கு போதிய அவகாசம் தராதது கல்வி முறையை ஸ்தம்பிக்கச் செய்துவிடும்.
இந்த விவகாரம் குறித்த சிபிஐயின் அறிக்கை மற்றும் மாநில பணியாளர்கள் தேர்வாணையத்தின் பிரமாணப் பத்திரத்தின்படி, வெறும் 4,327 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நியமனங்களில் மட்டுமே தவறு நடந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. சிபிஐ-யின் குற்றப்பத்திரிகையின்படி, முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று கூறப்பட்ட 23,123 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நியமனங்கள் தற்போது கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர், 15 நாட்களுக்குள் இந்தப் பணிகளுக்கு புதிதாக தேர்வு முறையை மேற்கொள்ளும் படி மாநில பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வாணையம் முழுமையாக பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறைவு செய்யும் வரை மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படும்.
துரதிருஷ்டவசமான இந்த நிகழ்வுகளில், நிபந்தனைக்குட்பட்ட மேலதிக எண்ணிக்கையிலான பணியிடங்களை உருவாக்குவது தொடர்பான பிரச்சினை உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்படவில்லை. மேலும், எந்தச் சூழ்நிலையிலும் இந்தப் பிரச்சினை குறித்து பதில் அளிக்க தனி நீதிபதி, டிவிஷன் பெஞ்ச் அல்லது இந்த உத்தரவை பிறப்பித்த சிறப்பு அமர்வு முன் விளக்கம் அளிக்க மாநில அரசு அழைக்கப்படவில்லை.
மனுதாரருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படாதது இயற்கையின் நீதிக் கொள்கையைச் சிதைக்கிறது. மனுதாரர்களும் தங்களின் நிலைப்பாட்டை பதிவு செய்யாமல் கண்டனம் மட்டும் தெரிவித்திருப்பது உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க எடுத்துக்கொண்ட பிரச்சினைகளின் நடைமுறைகளை மீறுகிறது. மேலும், இந்த விவாகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன” என்று அந்த மனுவில் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
வழக்கு பின்னணி: மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளில் அம்மாநிலத்தில் காலியாக உள்ள 24,640 பணியிடங்களுக்கு, 23 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களிலிருந்து 25,753 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை அமர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஏப்ரல் 22-ம் தேதி தீர்ப்பளித்தனர். அப்போது அவர்கள், “2016-ம் ஆண்டு ஆசிரியர் பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முறைகேடாக பணியில் சேர்ந்த 25,753 ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் திரும்பி செலுத்த வேண்டும். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையம், புதிதாக ஆசிரியர் நியமன செயல்முறையைத் தொடங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.