“தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை” – இபிஎஸ் விமர்சனம்

மேட்டூர்: “தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) காலை திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தில் இதற்கு முன்பாக பலபுயல்கள் வந்துள்ளன. எந்த அரசு புயல் நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு புள்ளி விவரத்துடன் நிதி கேட்டபோது, குறைத்து தான் கொடுப்பார்கள். மத்திய அரசு கேட்ட நிதியை கொடுத்ததே கிடையாது.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, திமுக மத்தியில் அங்கம் வகித்த காலங்களிலும் புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டது. அப்போதும் திமுக கேட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. தற்காலிக நிவாரணம் மற்றும் நிரந்தர நிவாரணம் என இரண்டு வகைகள் உள்ளது. இரண்டு அடிப்படையில் மாநில அரசு மத்திய அரசிடம் நிதியை கேட்கும்.

தற்காலிக நிவாரணமாக எஸ்டிஆர்எப் நிதியை எடுத்து எந்தெந்த நிவாரணத்துக்கு வேண்டுமோ அதற்கு செலவழிக்கலாம். நிரந்தர நிவாரணமாக என்டிஆர்எஃப் நிதியின் கீழ் விதிமுறைகளில் வந்தால் நிதி வழங்குவார்கள், இல்லாவிட்டால் வழங்கமாட்டார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு வரைமுறை வைத்துள்ளனர். என்டிஆர்எப் எவ்வளவு தொகை கொடுக்க முடியுமோ அதை மட்டும்தான் கொடுப்பார்கள். திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை.

இது இந்தியளவில் ஒரே மாதிரி தான் உள்ளது. மாநில அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை. மத்திய அரசு கொடுத்த நிவாரணம் சரியாக உள்ளதா என்பது குறித்து அரசாங்கத்துக்கு தான் தெரியும். எங்களிடம் எந்த புள்ளி விவரமும் கிடையாது. நிவாரணப் பணிகளுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்று ஒவ்வொரு துறை வாரியாக எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கணக்கிட்டு மத்திய அரசிடம் கேட்பார்கள். அதுகுறித்த புள்ளி விவரங்கள் அவர்களிடம் தான் இருக்கிறது எங்களிடம் இல்லை. வறட்சி வேறு; புயல் வேறு. மாநில பேரிடர் நிவாரண நிதி உள்ளது, இதனை எடுத்து செலவு செய்யலாம், அதை செலவு செய்த பிறகு நிதி பற்றவில்லை என்றால் மீண்டும் மத்திய அரசிடம் கேட்கலாம். விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் மத்திய அரசு மீண்டும் நிதி தரும்.

திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக அரசு வாதாடி பெறவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தபோது எத்தனை புயல்கள் வந்தன. அப்பொழுது கேட்ட நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. அப்போது சேதம் அதிகம்; தற்பொழுது சேதம் குறைவு,மழை மட்டும் தான் பெய்துள்ளது. புயலால் எங்கும் மக்கள் பாதிக்கப்படவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்பது அதற்கு தேவையான நிதியை அரசு கேட்டு பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மத்திய அரசு முழுமையான நிதியை விடுவிக்கவில்லை. இது காலங்காலமாக உள்ளது.

அதிமுகவுக்கு பொருத்தவரை அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம். தமிழகத்தை பொறுத்தவரை கோடை வெப்பம் அதிகரித்தது. வெப்பம் அதிகரித்ததன் காரணமாக மக்கள் இயல்பாக வாக்களிக்க முடியாத சூழல் இருந்தது, இருப்பினும் ஜனநாயக கடமையை தமிழக மக்கள் ஆற்றியுள்ளனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை தூர்வரப்பட்டது.இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கிடப்பில் போடப்பட்டது. மேட்டூர் அணை தூர்வாரப்பட வேண்டும். வண்டல் மண் அதிகமாக தேங்கியுள்ளது. மேட்டூர் அணை தூர்வாரப்பட்டால் கூடுதலாக தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

அதிமுக ஆட்சி காலத்துக்கு கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடரப்பட்டிருந்தால் மழைக் காலங்களில் ஏரிகளின் நீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

தற்போது கோடைகாலத்தில் அது பயனுள்ளதாக இருந்திருக்கும். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை நீரேற்று திட்டத்தின் மூலமாக நூறு ஏரிகளில் நிரப்பு இருந்தால், கோடை காலத்தில் பயனுள்ளதாக இருந்திருக்கும். இதையெல்லாம் திமுக அரசு தவறிவிட்டது.

திமுக ஆட்சியில் அனைத்திலும் குறைபாடு உள்ளது. எல்லாத் துறைகளிலும் குறைபாடு உள்ளது. குறைபாடு இல்லாத துறை என்ன உள்ளது. திமுக ஆட்சியில் மாற்றம் வரும் என மக்கள் எதிர்பார்த்தார்கள்; அதற்கு மாறாக கடுமையாக துன்பத்தையும், வேதனையும் தான் சந்தித்து வருகிறது.

தமிழகம் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. போதை பொருள் தடுப்பு பணியில் அரசு தோல்வியுற்றது. இந்த திமுக அரசும் காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை;தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது.

தற்போது போதைப் பொருட்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆனால் திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது. திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் எல்லாம் திமுகவாகவே மாறிவிட்டது. திமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகள் திமுகவிலே இணைந்து விட்டது போன்று உள்ளனர்.

நாட்டில் நடைபெறும் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள், அரசின் கவனத்துக்கு எடுத்து வைக்க வேண்டும். நல்ல எதிர்க்கட்சி மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு எடுத்து வைத்தால் தான்;அரசு கவனமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தும்.. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள்,திமுகவில் இணைந்துவிட்டதால் திமுகவை எதிர்த்து பேச மறுக்கிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.