எனது அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க விரும்புகிறேன் – ராசிக் சலாம்

டெல்லி,

ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 257 ரன்கள் குவித்தது.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க் 27 பந்தில் 84 ரன்கள் அடித்தார். இதையடுத்து 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 10 ரன் வித்தியாசத்தில் டெல்லி திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய டெல்லி வீரர் ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ராஷிக் சலாம் 4 ஓவர்கள் பந்துவீசி 34 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த மைதானத்தில் பந்துவீசுவது என்பது மிக கடினமான ஒன்று. இருப்பினும் எங்களது அணியின் பயிற்சியாளர்கள் அதற்காக தனி திட்டத்துடன் எங்களுக்கு பயிற்சி வழங்கியிருந்தனர். எனது அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்க விரும்புகிறேன். அதன்படி இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த போட்டிக்கு முன்னதாகவே வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பண்ட் ஸ்டம்ப் அருகில் வந்து நிற்கப்போவதை பற்றி கூறியிருந்தார். அந்தவகையில் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப அவரது நகர்வு விக்கெட்டுகளை பெற்று தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.