சந்தேஷ்காலியில் சிபிஐ, என்எஸ்ஜி உடன் இணைந்து தேர்தல் நேரத்தில் பாஜக சதி: தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகார்

கொல்கத்தா: தேர்தல் நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சிபிஐ மற்றும் என்எஸ்ஜி.,யுடன் இணைந்து சதி செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தி வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை கைப்பற்றியது. அவர்கள் என்எஸ்ஜி வெடிகுண்டுநிபுணர்களையும் வரவழைத்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது:

மேற்குவங்கத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில், சிபிஐ மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் சந்தேஷ்காலியில் சோதனை நடத்தி ஆயுதங்களை கைப்பற்றியுள்ளது. அவர்கள் தேசிய பாதுகாப்பு படையின் வெடிகுண்டு நிபுணர்களையும் அழைத்துவந்துள்ளனர். வெடிகுண்டு பிரிவுநிபுணர்கள் மேற்குவங்க போலீஸாரிடம் உள்ளபோது என்எஸ்ஜி படையை அழைக்க அவசியம் இல்லை. சோதனை குறித்து மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கும் முன்பே ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, திரிணமூல் காங்கிரஸ் தொடர்புடைய நபருக்கு சொந்தமான இடத்தில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்களை சிபிஐ மற்றும் என்எஸ்ஜி படையினரே கொண்டு வந்து வைத்திருக்கலாம். இது வாக்காளர் மத்தியில் திரிணமூல் காங்கிரஸ் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த பாஜக செய்யும் சதி.

இவ்வாறு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.