பாஜக – தலிபான் ஒப்பீடு: மாயாவதி மருமகன் மீது வழக்குப் பதிவு

லக்னோ: பாஜகவையும், தலிபான்களையும் ஒப்பிட்டு சர்ச்சையான வகையில் பேசியதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் மீது உ.பி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் சீதாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்டு பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த், “இது துரோகிகளின் அரசாங்கம். அவர்களின் கட்சி இளைஞர்களை பட்டினி போடுகிறது. பெரியவர்களை அடிமைப்படுத்துகிறது. இது புல்டோசர் அரசாங்கம் அல்ல. பயங்கரவாதிகளின் அரசாங்கம். இது போன்ற ஒரு அரசைத்தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “மாநிலத்தில் 16,000 ஆட்கடத்தல்கள் நடந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு பணியகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத, குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத அரசுக்கு இது வெட்கேடு” என்றார்.

தனது பேச்சின் இடையே பாஜகவை திருடர்களின் கட்சி என்றும், பணக்காரர்களிடம் இருந்து அக்கட்சி 16 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆகாஷ் ஆனந்தின் இந்த பேச்சு பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, “ஆகாஷ் ஆனந்த் பகுஜன் சமாஜ் கட்சியில் வாரிசு அரசியலின் புதிய செடியாக முளைத்துள்ளார். எனவே அவர் ஊடகங்களில் தலைப்புச் செய்தியில் இடம்பெறுவதற்காக வேண்டுமென்றே தொடர்ந்து இது போன்று பேசி வருகிறார். இதற்கு மக்களும், தேர்தல் ஆணையமும் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆகாஷ் ஆனந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது உ.பி போலீஸார் ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.