பெண்கள் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

சில்ஹெட்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஆட்டம் சில்ஹெட்டில் நேற்று நடந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக யாஸ்திகா பாட்டியா 36 ரன்னும், ஷபாலி வர்மா 31 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 146 ரன் எடுத்தால் வெற்றி என இலக்குடன் வங்காளதேச அணி தனது இன்னிங்சை ஆடியது.

இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் கேப்டன் நிகர் சுல்தானா (51 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்திய தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டும், பூஜா வஸ்ட்ராகர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இவ்விரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இதே மைதானத்தில் நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.