செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வங்கி தரப்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தாங்கள் கோரிய வங்கி தொடர்பான ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இந்த வழக்கில் தங்களது தரப்பில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களுக்கும் (சலான்கள்), அமலாக்கத் துறை வழங்கிய வங்கி சார்ந்த ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், வங்கியின் அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக உத்தரவிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அவருக்கு வங்கி ஆவணங்களை வழங்கியது. இந்த ஆவணங்களின் அடிப்படையில், செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அசல் சலான்களை வழங்க உத்தரவிட்ட நிலையில், வங்கி தாக்கல் செய்த சலான்களில் இரண்டு சலான்கள் நகலெடுக்கப்பட்டவை என்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் சலான்களை ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கூறி, செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.