டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பிளெயிங் XI இதுதான்… இவர்களுக்கு வாய்ப்பே இல்லை!

ICC T20 World Cup 2024, Team India Playing XI: ஐபிஎல் தொடர் பரபரப்பாக போய்கொண்டிருந்த சூழலில், அதில் மேலும் அனலை அள்ளிப்போடும் வகையில் நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஜூன் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் இந்த தொடர் நடைபெற உள்ள நிலையில், 15 பேர் கொண்ட இந்திய ஸ்குவாடையும், 4 மாற்று வீரர்களையும் பிசிசிஐ நேற்று அறிவித்தது. 

டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். மேலும், எதிர்பார்த்தபடி விராட் கோலி, ஜெய்ஸ்வால், தூபே, பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஸ்குவாடில் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்க மற்றொரு மணிக்கட்டு ஸ்பின்னரான சஹாலுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சஹால் டி20 உலகக் கோப்பை ஸ்குவாடில் இடம்பெற்றிருந்தாலும் ஒருமுறை கூட விளையாடியதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மாற்று வீரர்கள்…. 

ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவரும் ஸ்குவாடில் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. சுப்மான் கில், ரின்கு சிங், ஆவேஷ் கான், கலீல் அகமது ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, முக்கிய ஸ்குவாடில் இருக்கும் 15 வீரர்களே பிளெயிங் லெவனில் இடம்பெறுவார்கள். அதில் யாருக்காவது காயமேற்பட்டால் ஒழிய மாற்று வீரர்களால் களமிறங்க முடியாது. சுப்மான் கில், ரின்கு சிங் போன்ற வீரர்களின் சமீபத்திய பார்ம்-அவுட்டே அவர்களை அங்கு நிறுத்தியுள்ளது எனலாம்.

இடம்பிடிக்க தவறிய வீரர்கள்…

ஸ்குவாடில் வேகப்பந்துவீச்சாளர்கள் என எடுத்துக்கொண்டால் பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் ஹர்திக் பாண்டியாவும் 4 ஓவர்களை வீசியாக வேண்டும் எனலாம். அதேபோல் பலரும் எதிர்பார்த்த விக்கெட் கீப்பிங் பேட்டர்களில் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஸ்குவாடில் உள்ளனர். இவர்களில் ஒருவர்தான் பிளேயிங் அணியில் இடம்பெற முடியும். கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஜித்தேஷ் சர்மா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

பேட்டர்களிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியா, தூபே ஆகியோர் இருப்பதாலும், ரின்கு சிங்கே மாற்று வீரராக இருப்பதால் ரியான் பராக் அடுத்த உலகக் கோப்பை வரை காத்திருக்க வேண்டியதாகி உள்ளது.

ஒரு தமிழர் கூட இல்லை

வேகப்பந்துவீச்சில் நடராஜனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. மாற்று வீரராக கூட நடராஜனை இந்திய அணி அறிவிக்காதது அவருக்கு இழைக்கப்படும் அநீதி என பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் இருந்து ஒரு வீரர் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது என மூத்த தமிழக வீரர்களும் கருத்து தெரிவித்தனர்.

பிளேயிங் லெவன் வியூகம்

இந்நிலையில், வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் முதல்கட்ட பிளேயிங் லெவன் திட்டம் எப்படியிருக்கும் என்பது குறித்து இதில் பார்க்கலாம். டி20 உலகக் கோப்பை நடைபெறும் மைதானங்கள் பெரும்பாலனவை வேகப்பந்துவீச்சு சாதகமாக இருக்கும் என்பதால் இரண்டு பிரீமியம் வேகப்பந்துவீச்சாளர், ஒரு பிரீமியம் ஸ்பின்னர், ஒரு சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர், ஒரு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் என்ற காம்பினேஷனில் இந்தியா விளையாடும் வாய்ப்புள்ளது. குறிப்பாக பேட்டிங் டெப்த் வேண்டுமென்றாலும் இந்த காம்பினேஷன் சரியாக இருக்கும். 

வேகப்பந்துவீச்சு சாதகமான ஆடுகளங்களில்: ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால், விராட் கோலி – சூர்யகுமார் யாதவ் – தூபே – ரிஷப் பண்ட் – ஹர்திக் பாண்டியா, ஜடேஜா – குல்தீப், பும்ரா – அர்ஷ்தீப் சிங்

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில்: ரோஹித் சர்மா – விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் – தூபே – ரிஷப் பண்ட் – ஹர்திக் பாண்டியா, ஜடேஜா – குல்தீப் – சஹால், பும்ரா – அர்ஷ்தீப் சிங்

நீண்ட பேட்டிங் வரிசையும் வேண்டும், சுழற்பந்துவீச்சும் வேண்டும் என்றால் இன்னொரு காம்பினேஷனும் உள்ளது. சஹாலுக்கு பதில் அக்சர் படேலை மேலே உள்ள வரிசையில் சேர்க்கலாம் இதனால் மூன்று ஸ்பின்னர்கள், மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைப்பார்கள். ஜெய்ஸ்வால் பந்துவீசுவார் என்றால் அவரையே அணியில் இறக்கலாம். எனவே, சஞ்சு சாம்சன், சிராஜ், அக்சர் படேல், ஜெய்ஸ்வால், சஹால் உள்ளிட்டோர் காம்பினேஷனை பொறுத்த பிளெயிங் லெவனில் இடம்பெறுவார்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.