விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் பலி

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் உள்ள கடம்பன்குளத்தில் ஆவியூரைச் சேர்ந்த சேது மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோருக்கு சொந்தமான குவாரி மற்றும் கிர்ஷர் இயங்கி வருகிறது. வழக்கம் போல இன்று (புதன்கிழமை) காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குவாரியில் இருந்த வெடிமருந்து குடோனில் வெடிபொருட்களை வேனில் இருந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வெடிபொருட்களில் உராய்வு ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இந்த வெடி விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (47), கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த துரை (25), குருசாமி (60) ஆகிய மூவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் ஒரு கி,மீ வரை உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிதறி கிடக்கின்றன. மேலும், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் முழுவதுமாக தரைமட்டமானது. இதேபோல் வெடிபொருள்கள் கொண்டுவந்த வேன் இந்த விபத்தில் உருக்குலைந்து.

சுமார் இரண்டு கி.மீ தூரம் வரை வெடிபொருட்கள் வெடித்த சத்தம் கேட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளார். தற்போது வெடி விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஆவியூர் போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் இருந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார், சம்பவ இடத்தில் மேலும் வெடிபொருட்கள் இருக்கின்றதா, வெடி விபத்து நிகழ்ந்தது எப்படி என சோதனை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இதுவரை இந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் எவ்வளவு வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தது, எவ்வாறு வெடி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடம்பன்குளம், ஆவியூர், உப்பிலிக்குண்டு கிராம மக்கள் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பததாக தெரிவித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.