‘எங்கள் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை’ – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் 

புதுடெல்லி: இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநில அரசின் முன் அனுமதியின்றி அதன் எல்லைக்குள் பல வழக்குகளின் விசாரணையை சிபிஐ முன்னெடுப்பதாக மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

அரசியல் சாசன பிரிவு 131-ன் கீழ் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘மேற்கு வங்க மாநிலம், அதன் மாநில எல்லைக்குள் மத்திய அரசின் விசாரணை அமைப்பு வழக்கு விசாரணை மேற்கொள்வதற்கான பொது அனுமதியை திரும்பப் பெற்ற பின்னரும், சிபிஐ தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து விசாரணைகள் நடத்தி வருகிறது’ என்று குற்றம்சாட்டியிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேதா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு மத்திய அரசு சார்பாக ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, “உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள புனிதமான அதிகார வரம்புகளில் அரசியல் சாசனத்தின் பிரிவு 131-ம் ஒன்று. அது தவறாகப் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.

மாநில அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்குகள், மத்திய அரசால் பதிவு செய்யப்படவில்லை. மத்திய அரசு எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. அவை சிபிஐ பதிவு செய்துள்ளது. சிபிஐ என்பது இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை” என்று தெரிவித்தார்.

அரசியல் சாசனத்தின் பிரிவு 131 என்பது மத்திய அரசுக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலத்துக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினைகளை விசாரிப்பதற்கான உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைப் பற்றி கூறுகிறது. மத்திய அரசின் விசாரணை அமைப்பான சிபிஐ, மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதற்கும், சோதனைகள் மேற்கொள்வதற்கும் வழங்கப்பட்டிருந்த பொது அனுமதியை மேற்கு வங்க மாநிலம் 2018, நவம்பர் 18-ம் தேதி திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.