பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்பு

• தோட்ட மக்களின் பிரச்சினைகளை நான் ஒருபோதும் மறக்கவில்லை.

• ஜனாதிபதி என்ற வகையில் எனது ஆட்சியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்.

• லயன் அறைகள் சட்டபூர்வமாக கிராமங்களாக மாற்றப்பட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

• பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும்.

• நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பங்களிப்பிற்காக பெருந்தோட்ட மக்களுக்கு நன்றி – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கவில்லை எனவும், ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலத்தில் அவர்களின் உரிமைகளை தாம் உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொட்டகலை பொது மைதானத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் இணைந்து கொண்டதுடன், மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் மே தினக் கூட்டமும் பேரணியும் நடைபெற்றதுடன் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணப்படுகிறது.

மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு மலையக மக்களினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லயன் அறைகள் சட்டபூர்வமான கிராமங்களாக மாற்றப்பட்டு அவற்றின் வசதிகள் மேம்படுத்தப்படும் என மேலும் குறிப்பிட்டார். பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழில்சார் கல்வியை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த கால பொருளாதார நெருக்கடியின் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட போதிலும் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பெருந்தோட்ட மக்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,

நாங்கள் அனைவரும் மிகவும் கடினமான காலத்தை கடந்து வந்துள்ளோம். இதன் போது பெருந்தோட்ட மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் அறிவோம்.

ஆனால் சிரமங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தேயிலைக் கொழுந்து பறிப்பதன் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களித்தனர். 2023 ஆம் ஆண்டிலும் 2024 ஆம் ஆண்டிலும் தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றோம். அதற்கு ஜனாதிபதி என்ற வகையில் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

உங்களின் கடின உழைப்புத்தான் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியது என்றே கூற வேண்டும்.
2022 இல் நாடு இருந்த நிலைக்கு மீண்டும் செல்வதை இங்குள்ள யாரும் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.அதற்கு நாங்கள் யாரும் தயாராக இல்லை. நாங்கள் மிகவும் மோசமான சூழ்நிலைக்குச் சென்றோம்.

தற்போது இந்த நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது. தற்போது அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது. மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் நிவாரணத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், சுற்றுலா வருமானமும் அதிகரித்துள்ளது.அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை நாம் மறக்கவில்லை.

இந்த லயன் அறைகளை சட்டபூர்வமாக கிராமங்களாக அறிமுகப்படுத்த நானும் பிரதமரும் ஆலோசித்துள்ளோம். அதன் மூலம் இந்த இடங்களுக்கு கிராமங்களுக்கு கிடைக்கும் வசதிகள் கிடைக்கும்.

அதற்கான செயற்பாடுகளை அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் இணைந்து தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன் பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.அவர்களுக்கு விஞ்ஞானப் பாடங்களை கற்பிக்க தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நான் பிரதமராக இருந்த போது தோட்டங்களில் உள்ள பல பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்களை ஆரம்பித்தேன்.சில பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறையைத் தீர்த்து, அவற்றை மேம்படுத்தும் பணியும் இடம்பெற்று வருகிறது. மேலும், பெருந்தோட்டங்களில் தொழிற்கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மறக்கவில்லை.அந்த மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் நான் புரிந்துகொண்டுள்ளேன்.

எனவே எனக்குக் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி என்ற வகையில் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

1982 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க நான் அப்போதைய கல்வி அமைச்சராக பெருந்தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.பின்னர் 1986 இல் குடியுரிமை இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன அறிவித்த போது நானும் அதற்கு ஆதரவளித்தேன்.

2003 ஆம் ஆண்டில் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து இந்தியாவில் குடியுரிமை இருந்தும் மீண்டும் அங்கு செல்ல விரும்பாத மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.தற்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன.

இப்போது இந்த பகுதிகளை முன்னேற்றுவதற்கான நேரம் இது. எனவேதான் சம்பளத்தை அதிகரித்து இந்த பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் கிராமத்திற்கு மட்டுமல்ல, பெருந்தோட்டத்திற்கும் கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார:

இன்றைய மேதின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த சம்பளத்தை உயர்த்த ஒரு வருடம் கடுமையாக முயற்சி எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. மே முதலாம் திகதிக்கு முன்னர் இந்த சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.

பல மாதங்களுக்கு முன்னரே பெருந்தோட்டக் கம்பனிகளை வரவழைத்து இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

பெருந்தோட்டங்கள் அரசாங்கத்துக்கு சொந்தமானவை. உங்களுக்கு தேவையான வசதிகளை அவர்களால் வழங்க முடியாவிட்டால், அரசாங்கம் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டி வரும். அதற்கமையவே சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதோடு நிற்காமல், மேலதிகமான ஒவ்வொரு கிலோ தேயிலைக் கொழுந்துக்காகவும் 80 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இன்று வெளியிட்டு அதனை உங்கள் முன்னிலையில் அறிவித்துள்ளார்.

ஒரே இலங்கை தேசமாக உங்களுக்காக காணி உரிமை உட்பட சகல உரிமைகளையும் வழங்குவதே தற்போதைய ஜனாதிபதியின் தொலைநோக்குத் திட்டமாகும். இரண்டு வருடங்களுக்குள் இந்த நாட்டை ஸ்திரப்படுத்தியது போன்று உங்கள் அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைத் திட்டம் அவர் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை உங்களுக்கு அறிவிக்க விரும்புகின்றேன் என்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்,

கடுமையான போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம். குறுகிய காலத்தில் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக்க ஒத்துழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன,தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பலத்தின் ஊடாக போராடி இன்று இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு சமமாக படிப் படியாக உரிமைகள் பெற்ற சமூகமாக மலையக மக்களையும் மாற்றியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானாகும். அந்த வரலாறுகளை மறந்துவிடுகின்றனர்.

இந்த சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு பல தொழிற்சங்கங்களும் பல சமூக அமைப்புகளும் உதவி செய்தன. இத்தருணத்தில் அவர்களுக்கு இ.தொ.கா சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான்:

ஆறுமுகன் தொண்டமான் மறைந்த பின்னர் எம்மால் மேதினக் கூட்டம் நடத்த முடியவில்லை.கொரோனா,பொருளாதார நெருக்கடி என்பவற்றை எதிர்கொள்ள நேரிட்டது.இ.தொ.க முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்கள். 4 வருடத்தின் பின்னர் பாரிய மேதின கூட்டமொன்றை நடத்துகின்றோம்.தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 4 வருடங்களாக பல்வேறு அவமானங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறோம். எமது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாம் நிலஉரிமையற்ற சமூகமாக இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் என்றார்.

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன்,தேசிய அமைப்பாளர் ஏ.பி சக்திவேல்,பிரதித் தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தலைவி அனுஷியா சிவராஜா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.