மதுரை: குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வு எடுக்கச் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கொடைக் கானலில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க முடிவெடுத்தார். இதற்காக அவர் கடந்த 29-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மதுரை விமான நிலையம் வந்தார். இதன்பின்னர், கார் மூலம் கொடைக்கானல் சென்று குடும்பத்தினருடன் ஓய்வெடுத்தார்.
இந்நிலையில், அவரது பயணத்திட்டபடி, இன்று சென்னைக்கு திரும்புவார் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். சுமார். 7.10 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். இது தனிப்பட்ட பயணம் என்பதால் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் யாரும் முதல்வரை சந்திக்க விமான நிலையம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.