ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம்: காவல் துறை அலட்சியம் என எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை அலட்சியமாக இருந்ததாக எஸ்டிபிஐ கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், தனது உயிருக்கு ஆபத்தான மிரட்டல்கள் வருவதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 30-ம் தேதி புகார் மனு அளித்திருந்த நிலையில் காணாமல் போனார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்த நிலையில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது. தனது உயிருக்கு உறுதியான ஆபத்தான மிரட்டல்கள் இருப்பதாலேயே தான் புகார் அளிப்பதாக, மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்திருந்த புகார் மனுவில் ஜெயக்குமார் தனசிங் குறிப்பிட்டுள்ளார். அந்த புகார் மனுவின் அடிப்படையில் அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்காமல், மிகவும் அலட்சியமாக இருந்த காரணத்தாலேயே மர்மமான முறையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் காவல்துறையின் அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது. எல்லோராலும் அறியப்பட்ட ஒரு கட்சியின் மாவட்டத் தலைவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண குடிமக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில், காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.