வாகன இரைச்சலால் மனிதனுக்கு இத்தனை பாதிப்புகள் வருமா..? ஆய்வில் பகீர் தகவல்..!

சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று, போக்குவரத்து இரைச்சல் போன்றவற்றால் ஏற்படும் ஒலி மாசுபாடு காரணமாக மனித ஆரோக்கியம் எந்த அளவுக்குப் பாதிப்படைகிறது என்பது குறித்த ஆய்வு ஒன்றை சமீபத்தில் மேற்கொண்டது. இந்த ஆய்வில் டென்மார்க், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

ஹார்ட் அட்டாக் (Heart Attack)

ஆய்வின் முடிவில் மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட போக்குவரத்து இரைச்சல் ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

வாகன நெரிசல், ஒலிப்பெருக்கி, ஹாரன், டயர்களால் ஏற்படும் சத்தம், ரயில் போக்குவரத்தின்போது ஏற்படும் சத்தம், விமானப் புறப்பாடு, தரையிறக்கத்தின்போது ஏற்படும் சத்தம் ஆகியவைகளால் ஒலி மாசடைகிறது.

இது போன்ற போக்குவரத்து இரைச்சலால் ஏற்படும் ஒலியை 10 டெசிபலுக்கு மேல் கேட்கும் ஒவ்வொரு முறையும், இதயப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு 3.2 சதவிகிதம் அதிகரிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற இரைச்சல்களைக் கேட்பது தூக்கத்தின் அளவைக் குறைத்து, ரத்தக்குழாய்களில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். விளைவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தக்குழாய் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படும்.

இது தொடர்பாகப் பேசியுள்ள ஜெர்மனி பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மூத்த பேராசிரியர், “இந்த ஆய்வின் முடிவில் இதயம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதில் போக்குவரத்து இரைச்சல் ஒரு முக்கியக் காரணி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

வான்வழிப் போக்குவரத்தால் ஏற்படும் இரைச்சல்

மேலும், இதற்கு சிறந்த தீர்வு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போக்குவரத்து இரைச்சல் ஏற்படுவதை கட்டுப்படுத்துவது; 10 டெசிபல் அளவுக்கும் குறைவாக சத்தங்களை ஏற்படுத்தும் மாற்று போக்குவரத்து வழிமுறைகளை பயன்பாட்டில் கொண்டு வருவது. வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துதல், குறைந்த சத்தம் எழுப்பும் டயர்களைப் பயன்படுத்துவது போன்றவற்றையும் செய்யலாம்.

வான்வழிப் போக்குவரத்தால் ஏற்படும் இரைச்சலைக் குறைக்க, ஜிபிஎஸ் உதவியுடன் அதிக மக்கள்தொகை இல்லாத பகுதிகளின் வழியாக விமானப் பாதையை அமைக்கலாம். இரவு நேரங்களில் விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் தடை விதித்தாலே கணிசமான போக்குவரத்து இரைச்சலைக் குறைக்கலாம். சைக்கிளை பயன்படுத்துவது, போக்குவரத்து இரைச்சலைக் குறைக்க பொதுப் போக்குவரத்துகளில் பயணிப்பது போன்ற முயற்சிகளில் தனிநபர்கள் ஈடுபடலாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.