ஆட்களும், குடிநீரும் இல்லாமல் மதுரையில் காற்றாடும் தண்ணீர் பந்தல்கள்!

மதுரை: மதுரை மாநகரில் இளநீர், மோர், ஜூஸ், பழங்களுடன் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கி வைத்த நீர்மோர் பந்தல்கள் அடுத்தடுத்த நாட்களில் ஆட்களும், தாகத்துக்குக் குடிக்க தண்ணீரும் இல்லாமல் காற்றாடுகின்றன.

தமிழகத்தில் கோடை வெயில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வழக்கத்திற்கு மாறாக சுட்டெரிக்கிறது. கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் ஆட்களை உயிர் பலி வாங்கும் அளவுக்கு அடிக்கிறது. அதனால், பகல் பொழுதில் மக்கள், வாகன ஓட்டிகள் வெளியே நடமாடாததால் மாநகரச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் நகரங்கள், கிராமங்கள் பராபட்சமில்லாமல் அதிமுக, திமுக, பாஜக உள்பட முக்கிய அரசியல் கட்சிகள், இந்த கோடை வெயிலில் வெளியே வரும் மக்களுக்காகவும், வாகன ஓட்டிகளுக்காகவும் நீர், மோர் பந்தலை திறந்துள்ளன. நீர் பந்தல் திறப்பு விழாவை பிரமாண்டமான நிகழ்ச்சி ஏற்பாட்டுடன் செய்கின்றன.

திறப்பு விழா நாளில் தர்பூசணி, ஜூஸ், மோர், இளநீர், வெள்ளரி போன்ற நீர் சத்து அதிகரிக்கூடிய பழங்கள், குளிர்பானங்களை வழங்குகின்றனர். ஆனால், அதன்பிறகு அந்த பந்தலில் ஆட்களும் இருப்பதில்லை. தவிக்கிற வாய்க்கு தண்ணீரும் வைப்பதில்லை. கோடை காலம் முடியும் வரை நீர், மோர் வைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, தேர்தல் வாக்குறுதி போல் அதன்பிறகு நீர்மோர் பந்தல்களை அரசியல் கட்சிகள் கண்டுகொள்வதில்லை.

அரசியல் கட்சிகளின் மேலிடம் சொல்வதால் அதன் மாவட்டச் செயலாளர்கள், நகரச்செயலாளர்கள், கண்துடைப்புக்கு நீர் மோர் பந்தலை திறக்கின்றனர். கடமைக்கு சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வைக்கின்றனர். நீர் மோர் என்று சொல்லிவிட்டு சுகாதாரமில்லாமல் தண்ணீர் மட்டுமே வைப்பதும் தொடர்கிறது.

மதுரை மாநகர அதிமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளன. இதில், மாநகர மாவட்டச் செயலாளர் செல்லூர் கே.ராஜூ அலுவலகம் அருகே, அவரே திறந்து வைத்த அதிமுக நீர்மோர் பந்தல் திறப்புவிழா நாளில் மட்டும் நீர்,மோர், பழங்கள் போன்றவை வழங்கப்பட்டன.

இந்த தண்ணீர் பந்தல் திறக்கும்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, “அரசு மருத்துவமனை அருகே இந்த பந்தல் திறக்கப்படுவதால், வெளியூர்களில் இருந்து வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் இங்கு பகல் நேரத்தில் குடிநீர், மோர் குடித்து பயன்பெறுவார்கள்” என்றார். ஆனால், இந்த நீர்மோர் பந்தலில் பெரும்பாலான நேரங்களில் ஆட்களும் இருப்பதில்லை, தண்ணீரரும் இருப்பதில்லை என்று அந்த வழியாக குடிநீர் குடிக்க வந்து ஏமாற்றமடையும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

திமுக, பாஜக திறந்து வைத்த பல நீர் மோர் பந்தல்களிலும் இதேபோல் பெயரளவுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மோர், குடிநீர் வைத்துவிட்டு அவை காலியானதும் மீண்டும் வைப்பதில்லை. நிர்வாகிகள், தொண்டர்களை நியமித்து அந்த நீர்மோர் பந்தல்களை அரசியல் கட்சிகள் பராமரிக்க முன் வருவதில்லை.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “மாநகர அதிமுக மாவட்டச் செயலாளர் அலுவலகம் வைத்த நீர்மோர் பந்தலில் தினமும் 11.30 மணி முதல் 2 மணி வரை நீர், மோர் வழங்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனை அருகே இருப்பதால் அவை உடனடியாக தீர்ந்துவிடுகின்றன” என்றனர். பகல் முழுவதும் கோடை காலம் முடியும் வரை நீர், மோர் வைப்பதாக கூறிவிட்டு, குறிப்பிட்ட நேரம் மட்டுமே நீர், மோர் வைப்பது எந்த வகையில் நியாயம்?” என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.