`காலிஸ்தான் அமைப்பிடமிருந்து கெஜ்ரிவாலுக்கு நிதி..!' – NIA விசாரணைக்கு டெல்லி ஆளுநர் பரிந்துரை

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலைக் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைதுசெய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலை, திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, திகார் சிறையில் அவர்மீதான நீதிமன்ற காவல் மே 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் – அமலாக்கத்துறை – கெஜ்ரிவால்

இதற்கிடையில், தன்மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை சட்ட விரோதம் என அறிவிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல்செய்த மனு தள்ளுபடி செய்யப்படவே அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்ற அமர்வு, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்து, விசாரணையை மே 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காத என்பது உச்ச நீதிமன்றத்தில் நாளை தெரிந்துவிடும் என்றிருந்தது. இத்தகைய சூழலில், தடைசெய்யப்பட்ட காலிஸ்தானி தீவிரவாத அமைப்பிடமிருந்து ஆம் ஆத்மி பணம் வாங்கியிருப்பதாகப் புகார் வந்திருப்பதாகவும், இதில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணை நடத்த வேண்டுமெனவும் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா திடீரென கோரியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வி.கே.சக்சேனா

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக செயலாளருக்கு வி.கே.சக்சேனா எழுதியிருக்கும் கடிதத்தில், தேவேந்திர பால் புல்லர் என்ற காலிஸ்தானி தீவிரவாதியை விடுவிக்க தடைசெய்யப்பட்ட `Sikhs For Justice’ என்ற காலிஸ்தானி தீவிரவாத அமைப்பிடமிருந்து 2014 – 2022 காலகட்டத்தில் ஆம் ஆத்மி 16 மில்லியன் டாலர் பெற்றதாகவும், 2014-ல் நியூயார்க்கில் காலிஸ்தானி தீவிரவாதிகளுடனான சந்திப்பில் இதுதொடர்பாக கெஜ்ரிவால் அவர்களுக்கு உறுதியளித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், `புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த விஷயத்தை அனுப்புவது குறித்து உள்துறை அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும்’ என்று வி.கே.சக்சேனா கோரிக்கை வைத்திருக்கிறார்.

வி.கே.சக்சேனா கடிதம்

இந்தக் கடிதத்தில் கவனிக்கத்தக்க வகையில், உலக இந்து கூட்டமைப்பு இந்தியா என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் அஷூ மொங்கியா தன்னிடம் புகாரளித்திருப்பதாகவும், 01.04.2024 தேதியிடப்பட்ட அந்தப் புகார் கடிதத்துடன், சில விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பென் டிரைவ் ஆகியவற்றை இந்தக் கடிதத்தில் இணைத்து அனுப்பியிருப்பதாக வி.கே.சக்சேனா குறிப்பிட்டிருக்கிறார். இப்படியிருக்க, ஏப்ரல் மாதமே வந்த புகாரை ஒரு மாதம் கிடப்பில் போட்டுவிட்டு, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கொடுப்பது தொடர்பான விசாரணை நடைபெறுவதற்கு முந்தைய நாள், வி.கே.சக்சேனா என்.ஐ.ஏ விசாரணை கோரியிருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது. இதனை டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், “துணை நிலை ஆளுநர் பா.ஜ.க-வின் ஏஜென்ட். இது பா.ஜ.க-வின் உத்தரவின் பேரில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிரான மற்றுமொரு பெரிய சதி” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.