சென்னையில் வளர்ப்பு நாய் கடித்துக் குதறிய சிறுமிக்கு தீவிர சிகிச்சை; 3 பேர் கைது

சென்னை: சென்னையில் தடை செய்யப்பட்ட இரண்டு ராட்வைலர் நாய்கள் கடித்து குதறிய 5 வயது சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் உரிமையாளர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 3 பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியின் 4-வது தெருவில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் 5 வயது சிறுமி ஞாயிறு இரவு விளையாடிக் கொண்டிருந்தார். அந்தப் பூங்காவுக்கு எதிரே ஹேம்கேர் ரத்த வங்கி உள்ளது. இந்த ரத்த வங்கியின் உரிமையாளர் புகழேந்தி தனது வளர்ப்பு பிராணிகளான இரண்டு ராட்வைலர் நாய்களை அழைத்துக் கொண்டு மாநகராட்சிப் பூங்காவுக்கு நடைபயிற்சிக்காக வந்திருந்தார்.

அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை புகழேந்தின் இரண்டு வளர்ப்பு நாய்கள் மிகக் கடுமையாக கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், நாய்களை அடித்து விரட்டி, ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அச்சிறுமிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த ராட் வைலர் நாய்கள் தடை செய்யப்பட்ட இனங்கள் என்பதும், இவற்றை வளர்க்க புகழேந்தி லைசென்ஸ் எதுவும் பெறவில்லை என்பதும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த நாய் குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கெனவே புகார் அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீஸார் புகழேந்தி அவரது மனைவி தனலெட்சுமி மகன் வெங்கடேஷ்வரன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், சிறுமியை கடித்து குதறிய நாய்க்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதா? தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கால்நடைத் துறை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், “மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிய சிறுமியை நாய் கடித்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட நாய் தடைசெய்யப்பட்ட இன வகையைச் சார்ந்தது. ஆனால், அந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மூன்று மாநில உயர் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளன.

அதேநேரம் சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை எந்த பிராணிகளை வளர்த்தாலும் கட்டாயம் லைசென்ஸ் வாங்க வேண்டும். அதன் அடிப்படையில், புகழேந்தி குடும்பத்தினருக்கு கட்டாயமாக நோட்டீஸ் அனுப்பப்படும். காரணம் அவர்கள் லைசென்ஸ் எதுவும் பெற்றிருக்கவில்லை. லைசென்ஸ் பெறுவது குறித்தும், தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது என்பதையும் நாங்கள் ஒவ்வொரு முறையும் கூறி வருகிறோம். ஆனால் சிலர் பின்பற்றுவது இல்லை” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.