3-வது கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 94 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3-ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. இங்கு நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில், 3-ம் கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அசாம் மாநிலத்தில் 4, பிஹார் 5, சத்தீஸ்கர் 7, தத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள் 2, கோவா 2, குஜராத் 25,கர்நாடகா 14, மத்திய பிரதேசம் 9, மகாராஷ்டிரா 11, உத்தர பிரதேசம் 10,மேற்கு வங்கம் 4 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் தள்ளிவைப்பு: காஷ்மீரின் அனந்த்நாக் – ரஜோரி மக்களவை தொகுதியிலும் நாளை தேர்தல் நடக்க இருந்தது. பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டதால், இத்தொகுதியில் வாக்குப்பதிவு மே 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் காலமானதால் ஏற்கெனவே தள்ளிவைக்கப்பட்டிருந்த தேர்தல் நாளை நடைபெறுகிறது.

முக்கிய வேட்பாளர்கள்: நாளை நடைபெறும் 3-வது கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் டிம்பிள் யாதவ், சிவராஜ் சிங் சவுகான், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திக்விஜய் சிங், சுப்ரியா சுலே உட்பட மொத்தம் 1,352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றது. ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு என பல்வேறு கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இத்தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

அயோத்தியில் பிரதமர் ஊர்வலம்: கடைசி நாளான நேற்று உத்தரபிரதேசத்தின் எட்டாவா மற்றும் தவுரஹ்ரா ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசினார்.

அயோத்தியில் நேற்று மாலை நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். சுக்ரீவ் கிலாவில் இருந்து லதா சவுக் வரை சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு இந்த ஊர்வலம் நடைபெற்றது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், 94 தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.